கூட்டமைப்பின் மீது சேறு பூசப்படுவதால்..

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது சேறு பூசப்படுவதைக் கண்டு தமிழ் மக்கள் ஏமாந்துவிடக் கூடாதென்று அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அன்றும் இன்றும் தமிழ் மக்களுக்கு உள்ள ஒரே கட்சி கூட்டமைப்பு என்றும் கோடீஸ்வரன் கூறினார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் புனரமைக்கப்படவுள்ள 471 குறை வீட்டுத்திட்ட பயனாளிகளைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.காளிதாசனின் ஒழுங்கமைப்பில், பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வலுவிழந்த பல கட்சிகள் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது சேறு பூசுவதற்காக பல எதிர்வீச்சுக் கணைகளைத் தொடுக்கின்றன. அதனைக் கண்டு தமிழ் மக்கள் யாரும் ஏமாறா வேண்டாம். அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரே கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாத்திரமே என்பதை சொல்லி வைக்க விரும்புவதுடன் இதனை யாரும் மறுக்க முடியாது எனவும் கூறினார்.

மேலும் தமிழ் மக்களாகிய நீங்கள் அளித்த வாக்குகள் மூலம் நாம் பலத்தை பெற்றுள்ளோம். அந்தப் பலத்தை எதிர்காலத்திலும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். மாறாக அற்ப சொற்ப ஆசைகளுக்காக அடிபணிந்து மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ் மக்களின் பலத்தை உடைத்து விடக்கூடாது என்பதையும் அவ்வாறு நீங்கள் அளிக்கும் வாக்குகள் நமக்கெதிராகவே திரும்பி நம்மையே குழிதோண்டி புதைக்கும் என்பதையும் மறந்து விடக்கூடாது என்பதையும் கூறி வைக்க விரும்புகிறேன் என்றார்.

Related posts