மிஷேல் கோனின்சஸ் மற்றும் சம்பந்தன் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்த​னை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பிரேரணையின் அமுலாக்கதின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் இந்த பிரேரணைகளின் கூட்டு பங்காளிகள் என்பதனை மறந்தவர்களாக அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் பிரேரணைகளின் முன் மொழிவுகளை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமை தொடர்பில் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம் எனவும் இந்த நிலைமை நாட்டிற்கு நல்லதல்ல மிக விசேடமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த நிலைமை தொடர்ந்தால் அபகீர்த்தி ஏற்படும் எனவும் தெரிவித்த இரா.சம்பந்தன் ஒரு அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றினை சற்றும் மதிக்காமல் செயற்படுமேயாகில் அத்தகைய நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளின் உருவாக்கத்திற்கான அடிப்படை நோக்கங்களை கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இந்த அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதனை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இத்தகைய பிரரேரணைகளுக்கெதிரான அரசாங்கத்தின் செயற்பாடானது நல்லிணக்க முயற்சிகளிற்கும் கடந்த கால சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்குமான பொறிமுறைகளில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார். மனித உரிமை பேரவையின் பிரேரணையினையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினையும் உதாசீனம் செய்யும் வகையில் செயற்படுகின்றமையானது இந்த அரசாங்கம் பிறிதொரு அட்டவணையில் முன்செல்லுகின்றமைக்கான எடுத்துக்காட்டாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தற்போது அமுலில் உள்ள கடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தின் பின்னணியை விளக்கிய அதேவேளை இந்த சட்டத்தினை பிறிதொரு சட்டத்தினால் மாற்றீடு செய்வது இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளில் பிரதானமான ஒன்றாகும் என்பதனையும் ஒரு வரைபு சட்டமூலம் இருக்கின்ற போதிலும் அது குறித்ததான முன்னெடுப்புகள் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோரி அகிம்சை போராட்டங்களை நடாத்திய போது தமிழ் மக்களிற்கெதிரான வன்முறைகள் 1950 1970 மற்றும் 1980 களில் அரங்கேற்றப்பட்டது என்றும் இவை தமீழீழ விடுதலை புலிகள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் என்றும் எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன் சிங்கள தலைவர்களான பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோர் தமிழ் மக்களின் தலைவரான செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் உருவாக்கத்திற்கு முன் இடம்பெற்றவை ஆயினும் சிங்கள தலைவர்கள் அந்த ஒப்பந்தகளை மதித்து செயற்படவில்லை அவர்கள் அவ்வாறு மதித்து செயற்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்பட்டிருக்காது என்பதனையும் வலியுறுத்தினார்.

தொடர்ச்சியாக கட்டமிடப்பட்ட வகையில் எமது உரிமைகளை மறுக்கும் செயலானது ஐக்கிய நாடுகளின் சமூக அரசியல் உரிமைகள் சாசனத்தினை மீறும் செயலாகும் என்பதனை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் அவர்கள், இன்று எமது விருப்பிற்கு மாறாக நாம் ஆளப்படுகின்றோம் என்றும் தெரிவித்தார். மேலும் மீண்டும் ஒரு யுத்தம் உருவாகுவதை நாம் அனுமதிக்க முடியாது யுத்தத்தினால் எமது மக்கள் பாரிய அழிவுகளை சந்தித்துள்ளார்கள் என்றும் தெரிவித்த இரா சம்பந்தன், சிங்கள மக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதனை நாம் விரும்பவில்லை என்றும் ஆனால் துரதிஷ்ட்டவசமாக இந்த நாடு ஒரு சில சிங்கள பௌத்த பேரினவாதிகளால் இயக்கப்படுகின்றமையும் அத்தகைய சக்திகளிற்கு எதிராக சிங்கள தலைவர்கள் செயற்படாமையும் வருந்தத்தக்க விடயமாகும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த எம் ஏ சுமந்திரன் அவர்கள் இந்த நாட்டின் சட்டங்கள் இனங்களிற்கிடையே வித்தியாசமாக பிரயோகிக்கப்படுவதனையும் விசேடமாக சட்ட அமுலாக்க நிறுவனங்கள் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் அனுமதிப்பதனையும் எடுத்துக்காட்டினார்.

நாங்கள் பிரிவுபடாத பிரிக்க முடியாத ஒன்றிணைந்த இலங்கை தீவிற்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வினை எதிர்பார்க்கின்றோம் இந்த தீர்வினை எமக்கு விரைவில் வழங்காத சந்தர்ப்பத்தில் எமது மக்கள் தமது நீண்டகால அரசியல் கோரிக்கைகள் தொடர்பில் மீள சிந்திக்க நிர்பந்திக்கப்படுவார்கள் என்பதனையும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார் .

மேலும் இலங்கை அரசாங்கமானது தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றமையினை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் மிக உத்வேகத்துடனும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட வேண்டும் எனவும் இரா சம்பந்தன் வேண்டிக்கொண்டார்

தமது முன்மொழிவுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் கருத்துக்களிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதனை உறுதி செய்த உதவி செயலாளர் நாயகம் அவர்கள் ஐ நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்பதனையும் உறுதி செய்தார்.

இச்சந்திப்பில் உதவி செயலாளர் நாயகத்துடன் ஐக்கிய நாடுகளிற்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் சட்ட அதிகாரி அட்ரியா மற்றும் விசேட உதவியாளர் திரு லைலா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts