மோடிக்கு உயரிய விருது மாலத்தீவு அதிபர் வழங்கினார்

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது.

முதல் வெளிநாட்டு பயணம்

2-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை அண்டை நாடான மாலத்தீவுக்கு மேற்கொள்ள முடிவு செய்தார்.

அந்த நாட்டின் முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன், சீனாவுடன் மிகுந்த நட்புறவு பாராட்டி வந்தார். அவர் உள்நாட்டு கட்டமைப்புக்காக பெருந்தொகையை சீனாவிடம் கடன் பெற்று, மாலத்தீவை கடன் பிடியில் தள்ளினார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் இப்ராகிம் முகமது சோலி வென்றார். அவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தார்.

அதிநவீன ‘ரேடார்’

சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கிற வகையில், மாலத்தீவில் அதிநவீன ‘ரேடார்’ அமைப்பை இந்தியா நிறுவ அவர் உதவினார். இந்த திட்டத்தை சீனாவோடு ஒட்டி உறவாடிய முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலி பதவிக்கு வந்த பிறகுதான் இந்த திட்டம் புத்துயிர் பெற்றது.

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கை ஓங்கி இருக்க மாலத்தீவு பக்க பலமாக அமைந்துள்ளது. எனவேதான் மோடி மீண்டும் பிரதமரான பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்கு அந்த நாட்டையே தேர்வு செய்தார். அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அவர் அறிவித்தார்.

மாலத்தீவு சென்றார்

இதையொட்டி மோடி நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணம், அந்த நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள உதவும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

முதல் வெளிநாட்டு பயணத்துக்கு முன்பாக மோடி நேற்று முன்தினம் இரவு கேரளா சென்றார். நேற்று அவர் குருவாயூர் சென்று அங்குள்ள புகழ் பெற்ற கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்ததுடன், துலாபாரமாக தனது எடைக்கு எடை தாமரை பூக்களை வழங்கினார். பொதுக்கூட்டம் ஒன்றிலும் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அதைத் தொடர்ந்து கொச்சி சென்றார். அங்கிருந்து அவர் மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு தனி விமானத்தில் சென்றார்.

நேரில் வரவேற்றார் அதிபர்

மாலே நகரில் உள்ள வேலனா சர்வதேச விமானம் நிலையத்தில் சென்று இறங்கிய பிரதமர் மோடியை, அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அப்துல்லா சாகித், இந்திய தூதர் சஞ்சய் சுதிர் உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து அங்குள்ள குடியரசு சதுக்கத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், மரபை மீறிய சிறப்பு நிகழ்வாக பிரதமர் மோடியை அந்த நாட்டின் அதிபர் இப்ராகிம் முகமது சோலி நேரில் வரவேற்றார். அத்துடன் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இதையொட்டி, டுவிட்டரில் பிரதமர் மோடி ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “மாலத்தீவு வந்து சேர்ந்தேன். எனது பயணம், மாலத்தீவுடன் இந்தியா கொண்டுள்ள வலுவான உறவின் முக்கியத்துவத்தையும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த கொண்டுள்ள விருப்பத்தையும் காட்டுகிறது” என குறிப்பிட்டு உள்ளார்.

பிரதமர் மோடியும், அதிபர் இப்ராகிம் முகமது சோலியும் இரு தரப்பு தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராணுவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

மோடிக்கு உயரிய விருது

அதையடுத்து அதிபர் மாளிகையில் நடந்த விழாவில், வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவு அரசு வழங்கக்கூடிய உயரிய விருதை (‘ரூல் ஆப் நிஷான் இஜ்ஜூதீன்’) பிரதமர் மோடிக்கு அதிபர் இப்ராகிம் முகமது சோலி வழங்கி கவுரவித்தார்.

கிரிக்கெட் ரசிகரான அதிபர் சோலிக்கு, பிரதமர் மோடி அன்புப்பரிசாக ஒரு கிரிக்கெட் மட்டையை வழங்கினார்.

பிரதமர் மோடியும், அதிபர் இப்ராகிம் முகமது சோலியும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி கூறும்போது, “கடல்சார்பு மற்றும் ராணுவ உறவு முக்கிய முன்னுரிமையை கொண்டுள்ளது. ரேடார் அமைப்பு கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும். சாத்தியமாகக்கூடிய அனைத்து விதத்திலும் மாலத்தீவுக்கு இந்தியா உதவும்” என கூறினார்.

கடலோர ரேடார் கண்காணிப்பு அமைப்பையும், மாலத்தீவு படைகளுக்கான கூட்டுப்பயிற்சி மையத்தையும், இரு தலைவர்களும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பேச்சு

அதைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி மாலை 6.45 மணிக்கு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை ஆற்றினார். அப்போது அவர், “மாலத்தீவு பழங்கால ஆபரணம் போன்றது. இரு தரப்பு உறவு தனித்துவமானது. பிரிக்க முடியாதது. இந்த நாடாளுமன்றத்தில் என்னைப் பேச அழைத்தது, மகிழ்ச்சியை அளித்துள்ளது. அண்டை நாட்டுக்கு முதலிடம் என்ற கொள்கைக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே உள்ள உறவு வரலாற்றை விட பழமையானது. மாலத்தீவு இந்தியாவுக்கு ஒரு ஆதர்ச சக்தியாக திகழ்கிறது” என கூறினார்.

மேலும், “பாதுகாப்பு, பேரிடர், வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்தமட்டில், மாலத்தீவுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கும். நாம் இந்த பாதையில் தொடர்ந்து செல்வதை உறுதி செய்யும் வகையில் மக்கள் எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர்” எனவும் மோடி குறிப்பிட்டார்.

இலங்கை செல்கிறார்

பிரதமர் மோடி மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இலங்கைக்கு செல்கிறார். அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவுடன் அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஈஸ்டர் பண்டிகை தாக்குதலின்போது பலியானவர்களுக்கு அவர் நினைவஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts