இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 06.06.2019 வியாழன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியங்களை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (06) வழங்கினார்.

இதன்போது, பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லை என, அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கபில வைத்தியரத்ன தனக்கு வாய்மூல அறிவித்தலை விடுத்ததாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கூறினார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர , இடமாற்றம் தொடர்பான விவகாரம் ஒன்றுக்காக ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அன்று பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதன் பிறகு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன தன்னிடம் தெரிவித்ததாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அங்கு சாட்சியமளித்தார்.

————-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார்.

அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்த 30 ஆம் திகதி 2 வது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து முதற் தடவையாக மாலைத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்கிறார்.

அயல் நாடுகளுடனான நட்புறவுக்கு உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

————-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தை குழப்பிவிட்டார் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் தற்பொழுது ஜனநாயகம் சரியாக நிலை நாட்டப்படவில்லை. தேர்தல் திகதியை குறிப்பிடுவதற்கு ஜனநாயக தேர்தல் சட்டங்கள் என்று ஒரு சட்டம் இருக்கின்றது. அதன்படி தேர்தல் திகதியைக் குறிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உள்ளது. அது வேறு யாருக்கும் இல்லை. இதற்கமைய அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதியை நாங்களும் கண்டபடி குறிக்க முடியாது.

அதற்கமைய நாங்கள் ஆலோசித்து கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் போகும்போது, ஒரு விடயத்தைச் சொல்லியிருந்தோம். அதாவது நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளோம். அதற்குள் நாங்கள் அதைத் தீர்மானிப்போம் என்றும் சொல்லியுள்ளோம்.

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் ஜனாதிபதி தேர்தல் நடந்தவுடன் ஜனாதிபதி சிறிசேன வெல்லாவிட்டால் அவர் உடனடியாக பதவி விலகி வெற்றி பெறுகின்ற புதிய ஒருவருக்கு ஜனாதிபதிக்கான இடத்தைக் கொடுக்க வேண்டும்.

அந்த காரணத்தினாலோ என்னவோ தெரியாது எங்களுடன் பேசி இரண்டு நாட்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்குச் சென்ற போது இந்தியாவில் வைத்து டிசம்பர் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆக நாங்கள் கொடுத்த காலம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரையான காலம்தான். ஆனால் தான் எவ்வளவு காலம் கூடுதலாக ஜனாதிபதியாக இருக்கலாமோ அதற்குத் தக்கதாக அவர் திகதியைக் குறித்திருக்கிறார்.

எமது அதிகாரத்தை ஜனாதிபதி அப்படிப் பறிக்கும்போது நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது. ஆகையினால் இத்தேர்தல் என்ன நாள் வைத்தாலும் சரி டிசம்பர் 7 இல் வைக்கக் கூடாதென நான் தேர்தல் ஆணைக்குழுவில் சொல்லி இருக்கின்றேன்.

ஏனெனில் அது எங்களுடைய அதிகாரம் என்று காட்டுவதற்காகவே அவ்வாறு செய்ய உள்ளேன். அதாவது தேர்தல் தொடர்பான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தான் இறுதியில் தீர்மானிக்கும் என்று காட்டுவதற்காகதான் இவ்வாறு சொல்லியுள்ளேன்.

நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 இடையில் எந்த நாள் வைப்பதென்று ஆனைக்குழு தீர்மானிக்கும். ஆனால் ஜனாதிபதி சொன்ன 7 ஆம் திகதி தேர்தல் நடக்காது என்று நான் நம்புகின்றேன். இதை நாங்கள் கவனிக்காமல் விட்டு மரியாதைக்காக 7 ஆம் திகதி நடத்தினால் பின்னர் ஜனாதிபதியாக வருபவரும் எமது ஆணைக்குழுவின் வேறு அதிகாரங்களையும் பறிப்பார்.

ஆனாலும் ஜனாதிபதி அவருக்கு மரியாதை இருக்கிறது. அதற்காக எங்கள் அதிகாரங்களை எடுத்து உபயோகிக்கக்கூடாது. சட்டத்தின்படி நாட்டை நடத்துவதுதான் ஜனநாயகம். சட்டம் இல்லாமல் ஜனநாயகமும் இல்லை. ஆக அந்த இடத்தில் இந்த ஜனாதிபதி ஜனநாயகத்தையே குழப்பிவிட்டார் என்று கூறுகிறோம்.

ஜனநாயக முறையின் அடிப்படையில் நாங்கள் எங்கள் வாக்கை உபயோகித்து பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றோம். அவ்வாறு பிரதிநிகளைத் தெரிவு செய்த பின்னர் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். எந்தக் கட்சிக்கு கூடிய ஆசனங்கள் இருக்கிறதோ அந்தக் கட்சிதான் பிரதமரை நியமிக்கிறது. அந்தக் கட்சிதான் ஜனாதிபதியுடன் ஆலோசித்து அமைச்சர்களை தெரிவு செய்கிறது. இதுதான் ஜனநாயகம்.

அமைச்சர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்று ஞானசார தேரர் சொல்கின்றார். அவர்களும் பதவியில் இருந்து நீங்குகின்றார்கள். ஏனெனில் பயம். அது ஜனநாயகமா?” என்று கேள்வி எழுப்பினார் ரத்னஜீவன் ஹூல்.

(பிபிசி தமிழ்)

Related posts