பில்லி-சூனியம் எடுப்பதாக கூறி – இளம்பெண்ணை கற்பழித்த சாமியார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கிற செல்வமணி (வயது 40). இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமம் ஆகும். இவர் திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்வதாகவும், பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார். இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் காட்சி அளித்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்கள் மத்தியில் வலம் வந்தார்.

மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்து பேசி வந்துள்ளார். இதன் மூலமாக அவரை நம்பிய கிராமத்து மக்களில் பலர், பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர். அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்கி தருவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார்.

இதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார்.

இவ்வாறு சாமியாராக நடித்து பல பெண்களின் வாழ்க்கையில் அவர் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மதுரையை சேர்ந்த திருமணமான ஹேமா(40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து சாமியார் மணியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசியவர், தனது மகனின் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது, அதை நீங்கள் வந்து சரி செய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சாமியார் மணி அவரது வீட்டுக்கு நேரடியாக சென்றார். அங்கு அவர்களது பிரச்சினைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து, உங்கள் ஊரில் ஒரு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் பறந்து போய்விடும் என்று தெரிவித்தார். ஆனால், கோவில் கட்டும் போது உங்களது மகள் வீட்டில் இருக்கக் கூடாது, அவ்வாறு இருந்தால் அவளுக்கு ஆகாது. எனவே, எனது பாதுகாப்பில் உங்களது மகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சாமியாரின் ஆன்மிகம் கலந்த பேச்சால், தங்களையே மறந்த அவர்கள், சாமியாரை முழுவதுமாக நம்பினர். இதையடுத்து தங்களது மகளை சாமியாரோடு அனுப்பி வைத்தனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சாமியார் மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டே, அந்த இளம்பெண்ணை ஓங்கூருக்கு அழைத்து வந்தார்.

பல மாதங்களாக தன்னுடன் இருந்த, அந்த இளம்பெண்ணுக்கு 19-வது வயது பிறந்தவுடன், அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகளை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகையால் எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டார். இதை கேட்டு இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு இளம்பெண்ணும் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில், இளம்பெண்ணிடம் உனது அண்ணனின் பிரச்சினை தீர வேண்டும் என்றால், நீ என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே முடியும் எனக்கூறி ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இளம் பெண்ணை கற்பழித்தார்.

சாமியாரால் தனது வாழ்வு சீரழிக்கப்பட்டதை இளம்பெண் தனது தந்தைக்கு தெரியப்படுத்தினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்தார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஹேமாவையும் கைது செய்தார்.

போலீஸ் விசாரணையில் மணி போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளார். இதன் மூலம் பல பெண்களின் வாழ்க்கையையும் இவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை புகார் அளிக்க முன்வராததால் இந்த சாமியாரின் லீலைகள் வெளியாகாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரால் சாமியார் போலீசில் சிக்கி இருக்கிறார். எனவே தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related posts