மோடி ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலை..!

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார்.

17ஆவது மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிட்டார் .

இன்று காலையில் ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருந்தார். தற்போதைய நிலைவரப்படி நரேந்திர மோடி ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை இங்கு போட்டியிட்ட நரேந்திர மோடி, 3 இலட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை அதை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தொடக்க சுற்றில் பின்னடைவை சந்தித்து, பிறகு ஒரு இலட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார். அவர் போட்டியிட்ட கேரள மாநிலத்திலுள்ள வயநாடு தொகுதியிலும் அவர் முன்னிலையில் இருந்து வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித்ஷா அவர் போட்டியிட குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

Related posts