ராஜீவ் காந்தி NO:1 ஊழல்வாதி: பிரதமர் மோடி

ராஜீவ் காந்தி தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் 200 பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சேனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதி உத்தரபிரதேசத்தில்தான் உள்ளது. தற்போது ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக மே 12 மற்றும் மே19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய மோடி, ‘ராஜீவ் காந்தி ‘மிஸ்டர் கிளீன்’ என காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்டார். ஆனால் கடைசி காலத்தில் அவருடைய வாழ்க்கை ‘நம்பர்1’ ஊழல்வாதியாகத்தான் முடிவடைந்தது’ என கூறினார். மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு கண்ணியத்தை குறைக்கும் செயல் என டெல்லி பல்கலைக்கழகத்தின் 200 பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘பொய்யான மற்றும் கண்ணியத்தை குறைக்கும் கருத்துக்கள் மூலம் பிரதமர் அலுவலகத்தின் கவுரவத்தை குறைக்கும் செயல்,” என்று பேராசிரியர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கண்டனம் தொடர்பான கடிதம் வெளியானதும், நாங்கள் கையெழுத்திடவில்லை என டெல்லி கேஎம்சி கல்லூரியின் பேராசிரியர் மனோஜ் மற்றும் விஜிகா மறுப்பு தெரிவித்துள்ளாக ஆங்கில செய்தி சேனல் செய்தி வெளியிட்டது. மேரி கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ரிச்சா ராய் பேசுகையில், “கடிதத்திற்கு நான் ஆதரவுதான் கொடுத்தேன். இது ஒரு உண்மையான கடிதம், அதில் கையெப்பம் இடவில்லை என இரு பேராசிரியர்கள் மறுப்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. மற்றவர்கள் அதை மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன்,” எனக் கூறியுள்ளார்.

Related posts