ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய போர் விமானத்தால் பரபரப்பு

மும்பையில் ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய போர் விமானத்தால் பரபரப்பு உண்டானது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 என்ற போர் விமானம் கர்நாடக மாநிலம் எலகன்கா பகுதியில் உள்ள விமானப்படை தளத்துக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 11.29 மணியளவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

விமான நிலையத்தின் பிரதான ஓடுதளத்தின் 27-வது பாதையில் இருந்து கிளம்பி வேகமாக சென்ற அந்த விமானம் திடீரென ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி தரையில் சிக்கியது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அந்த விமானத்தில் இருந்த விமானி உள்பட அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தின் காரணமாக விமான நிலையத்தில் இரவில் பெரும் பரபரப்பு உண்டானது.

டெல்லியை அடுத்து நாட்டில் பரபரப்பாக காணப்படும் 2-வது மிகப்பெரிய விமான நிலையமான மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக பிரதான ஓடுபாதை உடனடியாக மூடப்பட்டது.

இதன் காரணமாக இரவு 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இரண்டாம் தர (செகண்டரி) ஓடுபாதை விமான இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

இதற்கிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த போர் விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடியதாக விமானப்படை தெரிவித்து உள்ளது.

போர் விமானத்தை மீட்பதற்காக என்ஜினீயர் குழுவினர் விமான நிலையத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Related posts