இறந்து 25 வருடங்களுக்கு பிறகு யாழ்ப்பாணம் வந்த உடல்

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடல் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு இன்று அதிகாலை எடுத்துவரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்றீபன் யோகி என்பவர் இத்தாலி நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நோய் வாய்பட்ட ஸ்றீபன் 1994 ம் ஆண்டு மே மாதம் 24 ம் திகதி அவருடைய 49 வது வயதில் இத்தாலியில் மரணமடைந்துள்ளார்.

அப்போது இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்ததால் இறந்தவரின் உடலை இலங்கைக்கு கொண்டுவர முடியாத காரணத்தினாலும், யுத்தம் எப்போது முடிவடையும் என்று தெரியாத காரணத்தினாலும் இத்தாலியில் இருந்த உறவினர்கள் 25 ஆண்டுகளுக்கு உடலினை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்தாலும் 25 வருடங்கள் நிறைவடையாமல் உடலினை பொறுப்பேற்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

இதனால் இறந்தவரின் மனைவி இத்தாலி நாட்டிற்குச் சென்று கணவரின் உடலினை பார்வையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் 25 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இறந்தவரின் உடல் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts