ராதா ரவியை கட்சியில் இருந்து நீக்கியது திமுக நயன்தாரா சர்ச்சை

நயன்தாரா குறித்து ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது திமுக

‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த சர்ச்சை தொடர்பாக விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் குறிப்பிட்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். ராதாரவி பேச்சு பெரும் சர்ச்சையானதால், இது வரவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடாது என்று திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து அவர் தற்காலிகமாக தி.மு.க. விலிருந்து நீக்கி வைப்படுகிறார்.

இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

ராதாரவியைச் சுற்றியுள்ள இந்தச் சர்ச்சைத் தொடர்பாக அவரிடம் கேட்ட போது கூறியதாவது:

நாங்கள் எல்லாம் ஒரே சினிமா ஜாதிக்காரர்கள். மனதில் பட்டதைச் சொல்றவன் தான். ஆனால், இந்த விஷயத்தில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நான் பேசவில்லை. ஆனால், இதற்காக நயன்தாரா மிகவும் வருத்தப்பட்டார் என்று சொன்னார்கள். ஆகையால் நானும் வருத்தப்படுகிறேன். நயன்தாரா நேரில் பார்க்கும் போது, வருத்தத்தை பதிவு செய்வேன். உங்களைப் பற்றி பேசவில்லை என்பதை அவரிடம் எடுத்துரைத்து, நிரூபிப்பேன்.

நான் பேசியதில் தவறில்லை. யாரையும் புண்படுத்திப் பேசமாட்டேன். மனதில் விஷமத்தன்மையுடன் பேசியதில்லை. எனக்கு நயன்தாராவுக்கும் சம்பந்தமே கிடையாது. இருப்பினும் இருவருமே ஒரே ஜாதி. சினிமா ஜாதி. இந்த விஷயத்தில் திமுக இயக்கத்துக்கு குந்தகம் விளைவித்தது மாதிரி இருந்தால், நானே விலகிக் கொள்கிறேன். என்னால் கட்சிக்கு அவப்பெயர் வேண்டாம். யார் மீதும் எனக்கு கோபமோ, வருத்தமோ இல்லை.

இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.

Related posts