விமானப்படை தாக்குதல் நிறுத்திக் கொள்ளுங்கள் : சீனா

இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதன் மூலம் இந்தப் பகுதியில் அமைதி நிலவ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

இதில் பாலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லு ஹாங் கூறியதாவது:

‘‘இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நடவடிக்கையை நிறுத்திக் கொண்டு இந்தப் பகுதியில் அமைதி நிலவ ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறோம். மீண்டும் நல்லுறவு ஏற்படவும், இணக்கமான சூழல் நிலவவும் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பது அத்தியாவசியமானது. இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

Related posts