காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்; யாழில் பூரண ஹர்த்தால்

யாழ் மாவட்டம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மேற்கொள்ளப்படும் பூரண ஹர்த்தால் காரணமாக அனைத்து விதமான சேவைகளும் முடங்கியுள்ளன.

இன்றைய தினம் (25) வடக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் அனைத்து விதமான சேவைகளும் முடங்கியுள்ளன. இதே போன்று யாழ் மாவட்டத்தில் காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அரச சேவைகள்,போக்குவரத்து,பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன் முக்கிய இடங்களில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராமையால் பாடசாலை வெறிச்சோடி காணப்படுவதுடன் எவ்வித கற்றல் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. அரச தனியார் போக்குவரத்து சேவைகளும் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. வட மாகாணத்தின் பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், போர்க் குற்றங்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. எதிர்வரும் மாதத்துடன் இரண்டு வருடங்கள் முடிவடைய இருக்கின்றது. ஆனால் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. பேரவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts