மனைவியின் கோடாரி தாக்குதலினால் கணவர் மரணம்

ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் கோடாரி தாக்குதலினால் கணவர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (18) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த கணவர் ஹொரவபொத்தான-புகுலேவெவ, கோன் கொல்லேவ பகுதியைச் சேர்ந்த செத்த முதலிகே சமிந்த புஸ்பகுமார (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த சில நாட்களாக மது போதையில் தனது மனைவியுடன் சண்டை பிடித்து வந்ததாகவும், அதேபோன்று நேற்றிரவும் (18) மதுபோதையில் வீட்டுக்கு வந்து சண்டை பிடித்துள்ளார்.

இதனையடுத்து மனைவி தனது தாயாரின் வீட்டுக்கு சென்ற போது அங்கு அவரை தேடிச் சென்றுள்ளார். பின்னர் கணவன்- மனைவிக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் அது கைகலப்பாக மாறியதாலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கோடாரி தாக்குதலினால் உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை ஹொரவபொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கோடாரியால் தாக்குதல் நடாத்திய மனைவியான டிஸ்னா குமாரி ரத்நாயக்க (22 வயது) தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலை 19ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏற்கனவே குடும்ப தகராறு பற்றி பல முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தீவிர விசாரணை மே‌ற்கொ‌ண்டு வருவதாகவும் ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts