பயங்கரவாதத்திற்கு இன்னொரு பெயர் பாகிஸ்தான் : மோடி

பயங்கரவாதத்திற்கு இன்னொரு பெயர் பாகிஸ்தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட மோடி பேசியதாவது: பிரிவினைக்கு பின்னர் உருவான பாகிஸ்தான், பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது.

தற்போது திவாலாகும் நிலையில் இருக்கும் அந்த நாடு பயங்கரவாதத்திற்கு பெயர் பெற்றுள்ளது. புல்வாமாவில், வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது. குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எங்கு, எப்போது நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி பாதுகாப்பு படையினர் முடிவு செய்வார்கள்.

வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் வேதனை மற்றும் உங்களின் கோபத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts