வாழ்த்தியவர்களுக்கு நன்றி: ரஜினி நெகிழ்ச்சி

தன் இளைய மகள் செளந்தர்யா திருமணத்துக்கு வருகைதந்து வாழ்த்தியவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி.

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம், நேற்று (பிப்ரவரி 11) சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 8-ம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கமல்ஹாசன், பார்த்திபன், சுந்தர்.சி, கே.பாக்யராஜ், பா.இரஞ்சித் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், திருமணத்துக்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி.

அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘என் மகள் செளந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்துக்கு வருகைதந்து வாழ்த்திய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரையுலகப் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல்துறை நண்பர்கள், திருமண விழாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related posts