நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தேர்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான தேர்தல் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் 2019 ஏப்ரல் 27ம் தேதியும் இதர நாடுகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பட இருக்கின்றது.
இரண்டாம் தவணைக்காலத்தின் அரசவை நிறைவுகண்டிருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது கடந்து வந்த பாதை அதன் செயல்முனைப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கடந்த அரசவை அமர்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விரிவான உரையொன்றினை ஆற்றியிருந்தார்.

அவ்வுரையில் குறிப்பாக நாடுகடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக பொருளியல் அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் வழிமுறையாகவும் நாடுகடந்த அரசியலும் நாடுகடந்த தேசியமும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களது தாயகத்தின் விடுதலைக்கான வேட்கைக்கும் பன்முகப்பட்ட புதிய வாய்ப்புக்களை வழங்குகின்றது என்ற கோட்பாட்டினையும் கையில் எடுத்து நமது நாடுகடந்த வாழ்க்கையின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகவே நாடுகடந்த அரசியலை நாம் அந்நேரம் பார்த்தோம்.

நாடுகடந்த அரசியலும் அவை சார்ந்த போராட்டங்களும் பொதுவாக இயங்கும் ஒரு தேசம் – ஒரு அரசு அல்லது ‘சர்வதேச உறவுகள்’ என்கிற நெறிமுறைக்குள் அடங்காதவை. அடக்கப்பட முடியாதவை.

நாடுகடந்த அரசியல் இவற்றிற்கு அப்பால் தொழிற்படுவதால் இது புதிய ஒழுங்கு முறைகளையும் புதிய நிறுவன அமைப்புக்களையும் வேண்டி நிற்கின்றது என நாம் எமது முயற்சியை நியாயப்படுத்தி இந்தப் பின்னணியில்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக்கட்டமைப்பினை தமிழீழ விடுதலை அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதியே இப்பாதையில் இறங்கினோம்

ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாடுகடந்த அரசாங்கத்தை அன்று முன்மொழிந்தது. அன்று முதற்தடவையாக உருவானது எவ்வாறு உண்மையோ அதற்கும் மேலாக இன்று வரை அந்த முயற்சியில் தடை ஏதுவும் இன்றி 9 ஆண்டுகளாக அரசாங்கமாக இயங்கி வரும் ஒரே மக்கள் அரசியல் இயக்கம் எமதானது என்பது பெருமைக்குரியது.

அந்த அரசியல் கோட்பாட்டு வலிமை மிக்க கட்டமைப்பின் தனித்துவம் எம் எல்லோராலும் எமது மக்களாலும் ஒரே அளவுக்கு உள்வாங்கப்ப பட்டுள்ளதா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியதே.

அது போலவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்தவொரு நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையும் அவதானத்துக்குரியது.

ஆண்டுக்கு இருமுறை நேரடியாகவும் ஒவ்வொரு மாதமும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பவாயிலாகவும் அரசவைக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளமை என்பது காலத்தின் வழித்தடத்தில் பதியப்பட வேண்டியவை. மற்ற தமிழரசியல் அமைப்புக்கள் இத்தகைய வரலாறு கொண்டவைகள் அல்ல என்பதும் உண்மையே. மற்ற தமிழரசியல் அமைப்புக்களு மட்டுமல்ல இன்று உலகில் இயங்கும் விடுதலை இயக்கங்களின் பாராளுமன்ற அரசியலுக்கும் (பாலஸ்தீனம் – குர்திஸ்தான்) நாமே முன்மாதிரியாக இருக்கின்றோம்.

தமிழீழ விடுதலைச் சுடரை உயிர்ப்புடன் கட்டிக்காத்து வருகிறோம்.

நீதிக்கும் இறைமைக்குமான எமது பல்முனை செயற்பாடுகளை உலக அரங்குகள் நோக்கி முன்னெடுத்து சென்றுள்ளோம் என தனதுரையில் குறிப்பிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மே-18 2009 முதல் இற்றை வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்த பல்வேறு செயல்முனைப்புகள் குறித்து பட்டியலை இட்டிருந்ததோடு செயற்திட்டங்களை இன்னும் வீச்சும் முன்னெடுக்க முடியாமல் போனமைக்கு ஆள்வளப்பற்றாக்குறை காரணமெனத் தெரிவித்திருந்தார்.

நாடுகடந்த வகையில் விடுதலைக்காய் அரசியலை தெளிவாகவும் குழப்பம் மாயைகள் குதர்க்கமான சொல்லாடல் எதுவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லி வாருங்கள் போராடுவோம் எமது மண்ணை மீட்டு இறையாண்மை மிக்க தமிழீழம் அமைப்போம் என ஒன்பது ஆண்டுகளாக போராடி வரும் தனித்துவமிக்க நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தை தலைமை தாங்கி வழி நடத்திய வாய்ப்பை தனக்குத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு கடமைப்பட்டவனாக தான் உள்ளேன் என்றும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

உலக சூழலில் எம்மை நோக்கிய அவதானம் குறையவில்லை. தாயக மக்கள் கடந்த மாவீரர் நாளில் எவ்வாறு நிமிர்ந்து நின்று காட்டினார்களோ எவ்வாறு உலகம் அவர்களது நிமிர்வைக் கண்டதோ அதே நிமிர்வுடன் எமக்கான நேரான பாதையில் எமது நாடுகடந்த அரசியலை புதிய வேகத்துடன் எடுத்து செல்வோம். அந்த ஒளி தெரியும் இடத்தை அடைந்து விடுவோம் தூரம் அதிகம் இல்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் வேலைத்திட்டங்களும்

சிங்களம் தனது இனத்துவேசம் மிக்க கோரம் நிறைந்த வடிவத்தின் இன்னொரு பக்கத்தை உலகுக்குப் படமிட்டுக் காட்டி தனது அரசவையை ஓத்திவைத்தும் தலைமை பதவிக்கென கைகலப்பு செய்யும் ஓர் அசிங்கமான போர்க்களமாக தென்னிலங்கை அரசியல் மாற்றியுள்ள இக்காலத்தில், மாண்புமிக்க மக்களாக மக்களாட்சி மரபின்படி நாம் கையில் எடுத்த எமக்குத் தரப்பட்ட கடமைகளையும் பொறுப்பையும் நிறைவு செய்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினது அரசவை தனது இரண்டாம் தவணைக்காலத்தின் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது பெருமைக்குரியது. உலகின் பார்வைக்கு தெரிவிக்கப் படவேண்டியது.

அமெரிக்காவின் பிலடெலிபியா நகரின் வரலாறு பூத்தா National Constitution Centrey 2010 மே-18ம் நாளன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் எமது இப் புதிய அரசியல் முனைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்படட நேரத்தையும் நாம் வந்த பாதையையும் எமது சாதனைகளையும் நாம் இன்னும் அடைய வேண்டிய இலக்குகளையும் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கின்றோம்.

அவற்றை மதிப்பிடுவது எமது மக்களதும் பரந்த உலகத்தின் பொறுப்பாகத் தான் இருக்கவேண்டும். இனி நாம் செல்ல வேண்டிய பாதையில் புதுப்பிக்க வேண்டிய அணுகுமுறைகள் எம்முடன் புதியவர்களை இணைத்து மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகள் யாவன முதன்மைப் பணிகாக உள்ளன.

தமிழீழத் தாயகத்தில் 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு
இறைமையுள்ள தமிழீழ அரசை அமைக்கும் தனது எண்ணத்தை வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வெளிப்படுத்தியது.

தந்தை செல்வநாயகம் தலைமை வகித்த இம்மாநாட்டின் தீர்மான வாசகங்கள் பிரகடனப்படுத்திய அதே நியாயம் தான் இன்றும் இன்னும் பல மடங்கு முக்கியத்துவம் பெற்ற நியாயமாக துலங்குகிறது.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் தேசிய இனம் தன்னுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் ஒரு தனிநாடு அவசியம் என்ற உண்மையையும் யதார்த்தத்தையும் இடித்துரைத்து நிற்கின்றது.

ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமை பொருந்திய சமயச்சார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீளஉருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்கமுடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது. என்பதே அத் தீர்மானத்தின் உறுதியான நிலைப்பாடு.

மேலும் சுதந்திரத்துக்கான இப்புனிதப் போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழீழ அரசு என்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும்படியும் தமிழ்த்தேசிய இனத்துக்கும் குறிப்பாகத் தமிழ் இளைஞர்களுக்கும் வட்டுக்கோட்டைத்தீர்மானம் அறைகூவல் விடுத்திருந்தது.

42ஆண்டுகள் கழிந்த பின்னரும் அப்போராட்டத்தின் தொடர்ச்சியாக அதன் நியாயத்தை வலுப்படுத்தும் வகையில் எமக்கு நடந்தேறிய இனவழிப்பை மையப்படுத்தி, நாடுகடந்த வகையில், விடுதலைக்காய் அரசியலை தெளிவாகவும் குழப்பம், மாயைகள், குதர்க்கமான சொல்லாடல் எதுவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லி, வாருங்கள் போராடுவோம், எமது மண்ணை மீட்டு இறையாண்மை மிக்க தமிழீழம் அமைப்போம் என ஒன்பது ஆண்டுகளாக போராடி வரும் தனித்துவம் மிக்க எமது நாடுகடந்த அரசங்கத்தை தலைமை தாங்கி வழி நடத்திய வாய்ப்பை, எனக்குத் தந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு கடமைப் படடவனாகவும், இப் பயணத்தில் பல்வேறு சவால்கள் மத்தியில் பணியாற்றி வந்த உறுப்பினர்கள் அமைச்சர்கள், துணையாக இயங்கிய அதனை தோழர்களுக்கும் எனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிக்கின்றேன்.

‘நாடுகடந்த தேசியம்’ என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக பொருளியல் அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் வழிமுறையாகவும், நாடுகடந்த அரசியலும் நாடுகடந்த தேசியமும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களது தாயகத்தின் விடுதலைக்கான வேட்கைக்கும் , பன்முகப்பட்ட புதிய வாய்ப்புக்களை வழங்குகின்றது என்ற கோட்பாட்டினையும் கையில் எடுத்து நமது நாடுகடந்த வாழ்க்கையின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகவே நாடுகடந்த அரசியலை நாம் அந்நேரம் பார்த்தோம்.

நாடுகடந்த அரசியலும் அவை சார்ந்த போராட்டங்களும் பொதுவாக இயங்கும் ஒரு தேசம் – ஒரு அரசு அல்லது ‘சர்வதேச உறவுகள்’ என்கிற நெறிமுறைக்குள் அடங்காதவை. அடக்கப்பட முடியாதவை.

நாடுகடந்த அரசியல் இவற்றிற்கு அப்பால் தொழிற்படுவதால் இது புதிய ஒழுங்கு முறைகளையும் புதிய நிறுவன அமைப்புக்களையும் வேண்டி நிற்கின்றது என நாம் எமது முயற்சியை நியாயப்படுத்தி, இந்தப் பின்னணியில்தான், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக்கட்டமைப்பினை தமிழீழ விடுதலை அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதியே இப்பாதையில் இறங்கினோம்.

ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாடுகடந்த அரசாங்கத்தை அன்று முன்மொழிந்தது. அன்று முதற்தடவையாக உருவானது எவ்வாறு உண்மையோ அதற்கும் மேலாக இன்று வரை அந்த முயற்சியில் தடை ஏதுவும் இன்றி 9 ஆண்டுகளாக அரசாங்கமாக இயங்கி வரும் ஒரே மக்கள் அரசியல் இயக்கம் எமதானது என்பது பெருமைக்குரியது.

அந்த அரசியல் கோட்பாட்டு வலிமை மிக்க கட்டமைப்பின் தனித்துவம் எம் எல்லோராலும் எமது மக்களாலும் ஒரே அளவுக்கு உள்வாங்கப்ப பட்டுள்ளதா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியதே.

அது போலவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்தவொரு நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையும் அவதானத்துக்குரியது.

ஆண்டுக்கு இருமுறை நேரடியாகவும் ஒவ்வொரு மாதமும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பவாயிலாகவும் அரசவைக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளமை என்பது காலத்தின் வழித்தடத்தில் பதியப்பட வேண்டியவை. மற்ற தமிழ் அரசியல் அமைப்புக்கள் இவ் வரலாறு கொண்டவை அல்ல என்பதும் உண்மையே. மற்ற தமிழ் அரசியல் அமைப்புக்களும் மட்டுமல்ல இன்று உலகில் இயங்கும் விடுதலை இயக்கங்களும் பாராளுமன்ற அரசியலுக்கும் (பாலஸ்தீனம் – குர்திஸ்தான்) நாமே முன்மாதிரியாக இருக்கின்றோம்.

தமிழீழ விடுதலைச் சுடரை உயிர்ப்புடன் கட்டிக்காத்து வருகிறோம். நீதிக்கும் இறைமைக்குமான எமது பல்முனை செயற்பாடுகளை உலக அரங்குகள் நோக்கி முன்னெடுத்து சென்றுள்ளோம். அவையாவன:

– மே 18, 2010 : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் / TGTE . ( www.tgte.org)
பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை சிங்களம் ஆக்கிரமிப்புச் செய்து வெற்றிமுழக்கமிட்ட அதே நாளில், ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என, எமது விடுதலை நெருப்பை புதியதொரு அரசியல் வடிவத்தில் அனைத்துலக அரங்கில் அணையாது ஏற்றினோம்.

– மே 18, 2011 : தமிழீழ தேசிய துக்க நாளாக மே18 பிரகடனம் செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது.

– மே 18, 2013 டிசெம்பர் 14 : – International Protection Mechanism / தமிழர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை:
தமிழர் தேசம் சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பளிக்கக் கூடிய அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று அரசவையில் நிறைவேற்றப்பட்டிருந்ததோடு, அனைத்துலக சமூகம் நோக்கி அமெரிக்காவின் பவ்லோ நகரில் இடம்பெற்றிருந்த அரசவைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

– மே 18, 2012 : தமிழீழ தேசிய அட்டை.
தமிழர்கள் ஓரு தேசிய இனம் என்பதனை அடையாளப்படும் வகையில் இது அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

– மே 18, 2013 : தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு.
தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த ஓர் பிரகடனமாக அமைந்திருந்தது.

நாளைய தமிழீழம் எத்தகைய கொள்கைகளை கொண்டிருக்கும் என்பதனை வெளிப்படுத்தும் வகையில 21 நிலைப்பாடுகளையும், வெளியுறவு, பொருண்மியம், மொழி, கல்வி, மருத்துவ மற்றும் உடல் நலம், மேம்பாட்டுக் கொள்கை, குடியுரிகை ஆகியனவற்றின் கொள்கைகளையும் இது உள்ளடக்கியிருந்தது.

– மே 17 2014 : SAY NO TO SRI LANKA சிறிலங்காவை புறக்கணிப்பு செயல்முனைப்பு.
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவை தனிமைப்படுத்தவும், அதன் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தவும் கூடியதானசிறிலங்கா புறக்கணிப்பு செயல்முனைப்பு மாநாடு லண்டனில் இடம்பெற்றிருந்தது.

– மே 18, 2014 : Dirty dozen சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகள் பட்டியல் வெளியீடு.
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த தடைப்பட்டியலுக்கு பதிலடியாக, சிறிலங்காவின் தமிழினஅழிப்பாளர்களின் 12 பேருடைய விபரங்களின் முதற்தொகுதி வெளியிடப்பட்டது.

பயணத்தடை, சொத்துமுடக்கம், அனைத்துலக குற்றவியில் நீதிமன்றம் நோக்கிய செயல்முனைப்பு நோக்கி இப்பட்டியல் வெளியிடப்பட்டது.

– யூலை 15 2014 Evidence Collection Project / சாட்சியங்களை திரட்டுதலும் ஆவணப்படுத்தலும் .
போரில் நடந்தேறிய பாரிய மனித உரிமைகள், சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பிலான விசாரணை ஒன்று, ஐ நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் (OISL- OHCHR Investigation on Sri Lanka ) 30 ஒக்ரோபர் 2014 வரைக்கும் நடைபெற்றது. 21 பெப்ரவரி 2001 இருந்து 15 நவம்பர் 2011 வரைக்கும் (LLRC period) பாதிப்புக்குள்ளானவர்களும், இந்த காலப்பகுதியோடு ஒட்டிய சம்பவங்களோடு தொடர்புடைய முந்திய அல்லது பிந்திய காலச் சம்பவங்களையும் பதிவு செய்ய முடியும். ஐ.நாவின் இச்செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

– மே 18, 2015 : Mullivaikal Memorial Lecture முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை.
தமிழினப்படுகொலையினை நினைவேந்துகின்ற வகையில் உலகின் முக்கிய ஆளுமைகளை அழைத்து, அவர்களின் நோக்கு நிலையில் இருந்து முள்ளிவாய்கால் இனப்படுகொலைக்கான நீதிகோரும் நினைவுப் பேருரையாக இவ்வாண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2015ம் ஆண்டு நினைவுப் பேருரையினைஅமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளர்க் ஆவார் வழங்கியிருந்தார்.

– மார்ச்15 2015 : March 15 2015 Million Signature Campaign – மில்லியன் கையெழுத்துப் போராட்டம் . (www.tgte-icc.org)
சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு, ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.1.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்துள்ளனர்.

– செப்ரெம்பர் 1 2015 : Monitoring Accountability Panel (MAP) சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் சர்வதேச நிபுணர் குழு : (http://war-victims-map.org/)
ஐ.நாவுக்கு சிறிலங்கா வழங்கிய உறுதிப்பாடுகளையும், அதன் நடப்பாடுகளையும் கண்காணித்து அறிக்கையிடுவதோடு, அதனை ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கு சமர்பிக்கின்ற வகையில் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட Monitoring Accountability Panel (MAP) எனும் குழு நியமனம் செய்யப்பட்டது.

– மே 18, 2016 : ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று .
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது கூட்டத்தொடர் தொடங்கியிருந்த 2015 செப்டம்பர் 14ம் நாளன்று தொடங்கிய இம் மரநடுகை இயக்கம், முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7வது ஆண்டு நினைவுநாளாகிய 2016 மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளனன்று நிறைவுற்றது.

– ஒக்ரோபர் 2017 : சீனாவின் 99ஆண்டு அம்பாந்தோட்ட குத்தகை தொடர்பான அனைத்துலகச் சட்டம், இறைமை நிலைப்பாடுகள் தொடர்பில் ஆய்வறிக்கை புறுக்கசல்சில் உள்ள கடல்சார் சட்டநிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டமை.

– டிசம்பர் 8 2017 : சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டப்போராட்டம்.
சிறிலங்க அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் சுதந்திர அரசு வேண்டுமென அமைதியான முறையில் எடுத்துரைப்பதையே குற்றச் செயலாக்குகிறது என்றும், இது குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பெறும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் பேச்சுரிமையையும் மீறுவதாகும் என்பதனைச் சுட்டிக்காட்டி ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து சட்டத்தரணிகள் ஒன்றிணைவில் ஐ.நாவில் முறையீடு செய்யப்பட்டது.

– Nation Building – Massive Action Plan தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பெரும் பணித்திட்டம் .
எமது எதிர்கால தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில், தூர நோக்கு சிந்தனையுடன் இனங்காணப்பட்ட 15 பெரும் பணித்திட்டம் வரையப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தேச கட்டுமானம் தொடர்பில் முன்னர் வெளியிட்டிருந்த பெரும் பணித்திட்டத்தின் காலஓட்ட தொடர்சியாக இது வரையப்பட்டது.

– Continuous attendance in UN HRC sessions /international lobbying ஐ.நாவை நோக்கிய உள்யேயும் வெளியேயுமான தொடர் செயற்பாடுகள்.

ஐ நா மனித உரிமைச் சபையின் கூட்டங்களில் பங்குபற்றி தமிழ் மக்களுக்கு எதிராக நிறைவேறிய நிகழ்வுகள் மற்றும் சமகால நிலமைகள் ஆகியவனவற்றைப் பற்றி பங்கு பற்றும் சர்வதேசத் தூதுவர்களுக்கு எடுத்துக் கூறுதல். மற்றும் சர்வதேச மட்டங்களில் பரப்புரை செய்தல்.

– Universal Jurisdiction Dossiers Report : தமிழ் மக்களுக்கு எதிராக நிறைவேறிய போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமான சாட்சியங்களை ஆவணப்படுத்துவதற்காக சர்வதேச நிபுணர்களைக் கொண்ட சட்ட நிறுவனத்தை நியமித்துள்ளது. இது தமிழ் மக்களின் விடுதலையை நோக்கிய பயணத்திற்கு ஒரு சாட்சி ஆவணமாக ( Reference material ) பாவிக்கப்டும்.

– மே 18 2018 : You are not forgotten” / உங்களை நாங்கள் மறவோம்.
சிறிலங்காவில் காணாமல் ஆக்கப்ட்டோருக்கான ‘உங்களை நாங்கள் மறந்து விடவில்லை’ இயக்கம் www.youarenotforgotten.org தொடங்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் நேரடியாக தமது உறவுகள் பற்றிய விபரங்களை தரவேற்றம் செய்து கொள்ள முடியும் என்பதோடு, இது ஒரு ஆவணமாகவும் இந்த இணையம் அமைகின்றது.

ஜனவரி 1 2018 : “Yes to Referendum” / பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்.
‘தமிழர் தலைவிதி தமிழரின் கையில்’ என்ற உயர்ந்த நோக்கத்துடன் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அராங்கம் தோற்றம் பெற்ற நாள் முதல் அதன் ஒவ்வொரு கட்டங்களிலும், தமிழர்களின் அரசியற் தீர்வுக்கான சிறந்ததொரு பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தி வந்துள்ளது.

இக்காலத்தில் குர்திஸ்தானிலும், கத்தலோனியாவிலும் இடம்பெற்றிருந்த பொதுவாக்கெடுப்பு புத்துணர்வையும் நம்பிக்கையினையையும் தந்திருந்த நிலையில், இச்செயற்பாடு இயக்கமாக தோற்றம் பெற்றது.

இது தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்களிடத்தில், அவர்களே தமது அரசியற் தலைவிதியைத் தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கையுடன் தனது செயற்பாட்டை இந்த இயக்கம் கொண்டுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அரங்கங்களை நடாத்தி வருகிறது. இந்த பொறிமுறைக் கூடாக பல நாடுகள் விடுதலை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நீதிக்கும் இறைமைக்குமான எமது செயல்முனைப்பில்
செய்து நிறைவேற்ற முடியாமல் போன சில திட்டங்கள் உண்டு என்ற குறையும் கவலையும் எம்மிடையே உள்ளதும்.

காரணம் – ஆள் வள பற்றாக்குறை !

முள்ளிவாய்க்கால் பேரழிவின் 10 ஆண்டுகள் தொட்டு நிற்கும் இந்நேரத்தில், சிறிலங்காவை நேரடியா அனைத்துலக நீதிக்கு முன் கொண்டுவர முடிய வில்லையே என்ற ஆதங்கம் உண்டு .

ஆனாலும் இவை போன்ற செயற்பாடுகள் அவற்றுக்குரிய வேகத்தில் தான் உலக சமூகத்தில் நடப்பதும் உண்மை என்பதனையும் நாம் அறிவோம். அதற்கான காலம் கணித்து வருவதாகவே நான் காண்கிறேன்.

காலம் கனியும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் காத்துக் கொண்டிருக்காமல், காலத்தினை கனிய வைக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றோம்.

மக்கள் மத்தியில் எமது அரசியல் முயற்சிகளில் நேரடியாக ஈடுபடுவதற்கான தயக்கம் இன்றைய காலத்தில் உள்ளதை நாம் நன்கு அறிந்து இருக்கிறோம்.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து நாம் எமது அரசியல் முனைப்பையும் இந்தக் கட்டமைப்பையும் எவ்வாறு புதுப்பித்து புத்துயிர் பெற வைத்து மக்கள் மத்தியில் நம்பிக்கை தரும் வகையில் அதற்கான வடிவத்தை சீர்படுத்தவோம் என்பதே எமது மூன்றாவது தவணைக்கான பெரும் கடமையும் பொறுப்புமாக நான் காண்கிறேன்.

பெண்களும் புதிய தலைமுறையும் எமது இலக்கினை ஒத்த வகையில் இன்று எம்மிடையே இல்லை என்பரு பெருங்குறை. இங்கும் கடும் அவதானத்துடனும் வேகத்தியுடனும் நாம் இப்போது செயட்பட வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மூன்றாம் தவணைக் காலத்துக்கான தேர்தல் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் 2019 ஏப்ரல் 27ம் தேதியும், இதர நாடுகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பட இருக்கின்றது.

தலைமைத் தேர்தல் ஆணையாளராக திரு. பொன் பாலராஜன் (கனடா), தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக செல்வி. லக்ஷ்மி லோகதாசன் (ஒவுஸ்திரேலியா)திரு. றோனி மறுசலீன் (பிரான்ஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அன்று பிலடெலிபியாவில் பதட்டம் சில இருந்த சூழலில் மிகுந்த உற்சாகத்தோடு தடைகளைத் தாண்டி எவ்வாறு இந்த அரசாங்கம் நிமிர்ந்து நின்றதோ அதே உற்சாகம் குன்றாமல் வகுத்த பாதையில் நெடுந்தூரம் நடந்து வந்து விட்டோம். விடுதலை ஒளி தெரிகிறது.

உலக சூழலில் எம்மை நோக்கிய அவதானம் குறையவில்லை. தாயக மக்கள் கடந்த மாவீரர் நாளில் எவ்வாறு நிமிர்ந்து நின்று காட்டினார்களோ எவ்வாறு உலகம் அவர்களது நிமிர்வைக் கண்டதோ, அதே நிமிர்வுடன் எமக்கான நேரான பாதையில் எமது நாடுகடந்த அரசியலை புதிய வேகத்துடன் எடுத்து செல்வோம். அந்த ஒளி தெரியும் இடத்தை அடைந்து விடுவோம் தூரம் அதிகம் இல்லை.

தமிழர் தலைவிதி தமிழிரின் கையில்
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts