யாழ்ப்பாணத்து கள்ளச் சாரயம் போகும் போக்கு ஈரல்கருக முன் கைது

இன்று யாழ்ப்பாணம் கல்வியில் கடைசி..
இன்று யாழ்ப்பாணம் உழைப்பில் கடைசி..
இன்று யாழ்ப்பாணம் இளவயது திருமணத்தில் முதல்…
இன்று யாழ்ப்பாணம் குடிகாரர் தேசமாக மாறிவிட்டது..
இப்படி பல குற்றச்சாட்டுக்கள்..
ஆனால் இவைகள் உண்மையா..
எத்தனையோ பேர் இதற்கப்பால் போராடுகிறார்கள் அதை பேசுவார் இல்லை..
ஒரு சிலரால் ஒட்டுமொத்த இனத்திற்கும் தலை குனிவு என்கிறார்கள் இன்னும் சிலர்..
ஆனால் இவைகளுக்கு ஆதாரம் சேர்ப்பது போல இருக்கிறது.. இந்த செய்தி..

யாழ் சுன்னாகம் பகுதியில் விசேட அதிரடிப்படையிரின் முற்றுகையில் மதுபானம் தயாரிக்க பயன்படும் ஏழாயிரத்து ஐந்நூறு லீட்டர் சட்டவிரோதமான எதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பனம் சாரயத்தை தருவித்து விநியோகிக்கும் சுன்னாகம் மதுபானக் கடை உரிமையாளர் ஒருவருக்கு எடுத்துவரப்பட்ட எதனோல் (தூய மதுசாரம்) இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக யாழ். விசேட அதிரடிப்படையினர் இன்று (24) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தென்னிலங்கையிலிருந்து பாரவூர்தியில் எடுத்துவரப்பட்ட 20 லீற்றர் கொள்ளவுடைய 371 எதனோல் அடங்கிய பெரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை எடுத்து வந்த பாரவூர்திச் சாரதி மற்றும் அவரது உதவியாளர் இருவரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு விநியோகிக்கப்படும் பனம் சாரயத்துக்கு கலப்படம் செய்வதற்காகவே இந்தப் பெரும் தொகை எதனோல், மதுபானக் கடை உரிமையாளரால் எடுத்துவரப்பட்டது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேகநபர்கள் யாழ். சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கில் இந்தப் பெரும் தொகை எதனோல் மீட்கப்பட்டது இதுவே முதன்முறை என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Related posts