சுகபோகங்களை எதிர்பார்த்து எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கவில்லை

எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப்பெறுகின்ற அரச சுகபோகங்களை எதிர்பார்த்து எதிர்கட்சி தலைவர் பதவியை வகிக்கவில்லை. எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப் பெறுகின்ற சலுகைகள் இல்லாமலே பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக செயற்படுவேன் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன முன்னணியில் இன்று வெள்ளிக்கிழமை உடற்கட்டமைப்பு போட்டியில் சர்வதேச ரீதியில் முதலிடம் பெற்ற இலங்கையரான லுஷன் புஷ்பராஜை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வரலாற்றில் முதற் தடவையாக அரச ஊடகங்களுக்கு பாராளுமன்றத்திலே கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கமே இன்று ஊடகத்துறையில் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

அரசாங்கத்திற்கு தேவையான விதத்திலே ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றன. இச்செயற்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒரு பொருப்பு வாய்ந்த எதிர்கட்சி ஒன்று செயற்பட வேண்டும் அப்போதே மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்படும். எதிர்கட்சி தலைவர் அலுவலகம் மற்றும் எதிர்கட்சிதலைவரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலம் என்பன இன்று பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றை ஒருபோதும் நான் கோரவில்லை. பதவிகளை வகிக்கும் பொழுது கிடைக்கப்பெறுகின்ற அரச சுகபோகங்களை துறந்தும் மக்களுக்காக சேவை செய்துள்ளேன்.

Related posts