மஹிந்தவின் அராஜகத்தை அடக்கியதால் புதிய அரசமைப்பு புத்துயிர்

மஹிந்தவின் அராஜகத்தை அடக்கியதால் புதிய அரசமைப்பு புத்துயிர் என்று சுமந்திரன் எம் பி கூறியிருக்கின்றார்.

எதிர்வரும் மாசி 4 ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஜேவிபியும், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து புதிய அரசமைப்புக்கான ஒரு வரைபை வெளியிடுவோம் என அவர் கூறியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்- கடந்த நவம்பர் 7 ஆம் திகதி வரவிருந்த அரசமைப்பு வரைபை தடுப்பதற்காகவே மஹிந்தவை பிரதமராக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜனாதிபதி.

19ஆவது திருத்தத்தில் இருந்த தமது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை அறியாதவர் போன்ற நடவடிக்கைகளை செய்திருந்தார். 19ஆவது திருத்தத்தில் அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் இன்னும் இருப்பது போன்று ஜனாதிபதி இந்த தீர்மானங்களை எடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்க நீதிமன்றம் சென்றதற்காக ஒரு விமர்சனம் உள்ளதே..? நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைந்ததால் அல்லது சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி அடைந்ததால் மிகவும் பாதிக்கப் படுவது தமிழ் மக்கள். ஆகையினால் சட்டத்தின் ஆட்சியை வீழ்ச்சியடைவதை ஏற்கமுடியாது. அதைத் தடுத்தாக வேண்டும்.

ஏனெனில் ஓர் அரசியல் தீர்வை நாம் எதிர் நோக்குவது..
அரசமைப்பின் மூலமான ஒரு தீர்வு, புதிய அரசமைப்பு மூலமாக…
அல்லது ..
அரசமைப்பு மறுசீரமைப்பு மூலமாக எழுதப்படும் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம்.!

அவ்வாறு வழங்கப்பட்ட பின்னர் அரசு மாறுமாக இருந்தால் அந்த தீவில் ஒரு பிரயோசனமும் இல்லாமல் போய்விடும். தற்போது உள்ள சூழ்நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என இருக்கின்ற போது, அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

பிரதமரை மாற்ற முடியாத எழுதப்பட்டபோது, பிரதமரை மாற்றினார். அரசமைப்பைப் பேணி எதையும் செய்யாவிட்டால் இது போன்ற ஏமாற்று நிலை ஏற்பட்டால் அப்போது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இதை தடுப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். இதனால் ஏற்பட்ட விளைவுகள் மிக மிக முக்கியமானவை. நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் அடக்குமுறை, ஒடுக்குமுறை, காணப்பட்டன.

தற்போது மக்கள் நிம்மதியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வருட காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று சொல்லிக்கொண்டிருந்த பலருக்கு மஹிந்த வந்தவுடனேயே தெளிவு வந்துவிட்டது.

தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் நாட்டில் ஜனநாயகத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு காப்பாற்றியதாக ஒரு நல்ல எண்ணம் உதித்தது.இது புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் மிகப்பெரிய பங்கை வகிக்கும்.

கூட்டமைப்பு நாட்டை பிரிக்க விரும்பவில்லை. புதிய அரசமைப்பை உருவாக்க பணியில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் மறைய இந்த எண்ணம் உதவியது. ஆகையினால் மிகத் துரிதமாக புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபடுகிறோம்.

எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து புதிய அரசமைப்புக்கான ஒருவரைபை வெளியிடுவோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சி, மக்கள் மத்தியில் கொண்டு வரப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிரூபிக்கப்படும். சர்வஜன வாக்கெடுப்புக்கு போகும்போது ஏற்கனவே குறிப்பிட்ட நல்லெண்ணம் மிகப்பெரிய பங்கு வகிக்கும் வருடத்தில் புதிய அரசமைப்பை உருவாக்கும் மிக அரிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்,

Related posts