பவர் ஸ்டார் சீனிவாசனை மனைவியுடன் கடத்திய கும்பல் ?

தன்னை கடத்திய கும்பல் தனது மனைவியை வரவழைத்து பணையமாக பிடித்துவைத்து சொத்தை எழுதி கேட்பதாக தப்பி வந்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் அளித்த புகாரில் அதிரடியாக செயல்பட்ட போலீஸார் 7 பேரை கைது செய்து அவரது மனைவியை மீட்டனர்.

கடந்த வாரம் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதை போலீஸார் விசாரித்தபோது புகார் அளித்த அவரது மனைவி ஊட்டியில் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் இருந்தார். ஊட்டிக்கு இடம் வாங்க வந்துள்ளதாக ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் தெரிவித்தார். ஆனால் உண்மையில் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் கடத்தப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

தனது தந்தை கடத்தப்பட்டுள்ளார் என அவரது மகள் புகார் தெரிவித்தும் அண்ணாநகர் போலீஸார் அதை சீரியசாக பார்க்கவில்லை. ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் கடத்தப்பட்டது, அவரது மனைவியை பிணையாக வைத்துக்கொண்டு அவரை சென்னைக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனிடம் கடந்த 3-ம் தேதி சினிமா ஒப்பந்தம் குறித்து பேச வேண்டும் என தயாரிப்பாளர் வரச் சொன்னார் என பிஆர்ஓ அழைக்க அங்குச்சென்ற அவரை ஒரு கும்பல் கடத்தியது. அங்கிருந்து பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற அக்கும்பல் அவரது மனைவியையும் அழைத்து வரவழைத்து கடத்தியது.

பின்னர் அந்தக்கும்பல் அவர் இடத்தை ரெஜிஸ்டர் செய்து தரச்சொல்லி மிரட்டியது. அப்போது தனது குழந்தைகளைப் பார்க்கவேண்டும் என ‘பவர் ஸ்டார்’ சொல்ல, மனைவி ஜூலியை பிணையாக வைத்துக்கொண்டு அவரை விடுவித்து சென்னை அனுப்பியது அந்த கும்பல். சென்னை வந்த ‘பவர் ஸ்டார்’ நேற்று மதியம் கோயம்பேடு போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த 3-ம் தேதி சினிமா பிஆர்ஓ ப்ரீத்தி ஒரு படத்திற்கு பத்து நாள் கால்ஷீட், ரூ.10 லட்சம் அட்வான்ஸ், தயாரிப்பாளர் அழைக்கிறார் என கோயம்பேட்டில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு அழைத்தார். இதனால் கோவையிலிருந்த நான் நேரடியாக எனது காரில் சென்னை வந்தேன். அங்குச் சென்று ப்ரீத்தியை ஒரு ஹோட்டல் அறையில் சந்தித்தேன்.

சிறிது நேரத்தில் தயாரிப்பாளர் செல்வின் எனச்சொல்லி ஒருவர் வந்தார், அவருடன் ஸ்டண்ட் யூனியனை சேர்ந்த ஒருவரும் வந்தார். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு 7 பேர் அறைக்குள் வந்தனர். அதில் 3 பேர் வழக்கறிஞர்கள் என்று சொன்னார்கள். அவர்கள் வந்தவுடன் என் கையிலிருந்த 2 செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டார்கள்.

பின்னர் என் உடைகளை களைந்து என் தொப்பியையும் பறித்துக்கொண்டு என்னை கீழே அமரவைத்தார்கள். நான் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள், பெங்களூரில் உள்ள ஆலம் என்பவரைத் தெரியுமா? எனக்கேட்டனர். ஆமாம் அவருக்கு நான் 90 லட்சம் தர வேண்டிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்ன விஷயம் என்று கேட்டேன்.

அந்தப்பணத்தை உடனே தரவேண்டும் எனக்கேட்டு மிரட்டினார்கள். நான் என்னிடம் பணம் இல்லை, ஊட்டியில் உள்ள வீட்டை எழுதித்தருகிறேன் என்றுச் சொன்னேன். உடனே எழுதிக்கொடு என்றுச் சொன்னார்கள். வீடு என் மனைவிப்பெயரில் உள்ளது அவர்தான் கையெழுத்துப் போடவேண்டும் என்றுச் சொன்னேன்.

அப்படியானால் உன் மனைவியை இங்கு அழைத்துவா என்றார்கள், நான் என் மனைவியை ஹோட்டலுக்கு எல்லாம் அழைத்து வரமாட்டேன் என்றுச் சொன்னேன். பின்னர் என்னை அழைத்துக்கொண்டு எனது காரையும் எடுத்துக்கொண்டு இரண்டுக் காரில் செங்கல்பட்டு சென்றார்கள். அங்கிருந்து மீண்டும் அண்ணா நகர் வந்தனர்.

பின்னர் என்னை வலுக்கட்டாயமாக ஊட்டி அழைத்துச் சென்றனர். ஊட்டியில் ஆலம் வந்து அவரது இடத்திற்கு என்னை அழைத்துச் சென்று மிரட்டினார். உன் மனைவியை உடனடியாக வரச்சொல், ஊட்டி வீட்டை ரெஜிஸ்டர் செய்து தரச்சொல் என்றார். என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் 6-ம் தேதி விமானம் மூலம் கோவை வரவழைத்து அங்கிருந்து ஊட்டி வரவழைத்தனர்.

மறுநாள் இடத்தை ரெஜிஸ்டர் செய்ய அழைத்துச் சென்றனர். என் மனைவி உங்கள் மீது நாங்கள் போலீஸில் புகார் அளித்துள்ளதால் நீங்கள் ரெஜிஸ்டர் செய்ய முடியாது என கூறவே மீண்டும் ஹோட்டலுக்கு திரும்ப அழைத்து வந்து என்னை மிரட்டினர். திங்கட்கிழமை கட்டாயம் ரெஜிஸ்டர் என சொல்லி என்னை ஒரு இடத்தில் அடைத்து வைத்துவிட்டு என் மனைவியை அவர்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்.

மறுநாள் ஆலம் வந்தார். திங்கட்கிழமை ரெஜிஸ்ட்ரேஷன் என்று சொன்னார். நான் என் குழந்தைகளை பார்க்கவேண்டும் என்று சொன்னேன். என்னிடம் சில தாள்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு என் மனைவியை பணையமாக வைத்துக்கொண்டு என்னை சென்னை செல்ல அனுமதி அளித்தனர். சென்னை வந்த நான் நேராக இங்கு வந்து புகார் அளிக்கிறேன்.

என்னை கடத்தி பணம் கேட்டு மிரட்டி என் மனைவியை அடைத்து வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் மனைவியை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பவர்ஸ்டார் சீனிவாசன் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கோயம்பேடு போலீஸார் 147 (கலவரம் ஏற்படுத்தும் எண்ணத்துடன் செயல்படுதல்) 364 (எ) (பணையத்தொகைக்காக கடத்தி அடைத்து வைத்தல், மிரட்டுதல்), 365 (ரகசியமாகவும் தவறான உள்நோக்கத்துடனும் கடத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக ஊட்டிச் சென்றனர்.

ஊட்டியில் தங்கியிருந்த ஆலம், செல்வின், ப்ரீத்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். ‘பவர் ஸ்டாரின்’ மனைவியையும் மீட்டனர். அனைவரும் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.

Related posts