யு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள்

ஒரு நிமிடம் விழிகளை மூடி உங்கள நினைவென்னும் கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் ஏழு வயதில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்களென நினைத்து பாருங்கள். பள்ளியில் சக மாணவனுடன் சண்டையிட்டது, அம்மாவிடம் வாங்கிய செல்ல திட்டுகள் என பல நினைவுகள் வரலாம். ரயான் முப்பது ஆண்டுகளுக்கு பின் தனது ஏழு வயது நினைவுகளை அசைப்போட்டால் அவருக்கு மில்லியன் டாலர்கள் மதிப்புடைய நினைவுகள்தான் வரும்.

ஆம், ஏழு வயதில் ரயான் ஈட்டியது 22 மில்லியன் டாலர்கள். இந்த தொகை யு-டியூப் மூலம் திரட்டப்பட்டது.

ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமர்சகரான ரயான் பிரபல யு-ட்யூபரான ஜேக் பாலை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ரயான் வெளியிட்ட நீல மர்ம முட்டை காணொளியை மட்டும் லட்சகணக்கானவர்கள் பார்த்து இருக்கிறார்கள்.

மூன்றாம் இடத்தில் ட்யூட் பெர்ஃபெக்ட் சேனல் 20 மில்லியன் டாலர்கள் ஈட்டி மூன்றாம் இடத்தில் உள்ளது.

வரி, ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த தொகையை சேர்க்காமல் பார்த்தால், அவரது வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

வேடிக்கை பையன்

ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் உங்களுடைய காணொளியை சிறுவர்கள் விரும்புவதற்கு காரணமென்ன என்ற கேள்விக்கு ரயான், “என்னுடைய காணொளிகள் பொழுதுபோக்குடனும், வேடிக்கையாகவும் இருப்பதுதான் காரணம்” என்று கூறி உள்ளார்.

எப்போது தொடங்கப்பட்டது?

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ரயான் யு-டியூப் சேனலில் பகிரப்படும் காணொளிகள் 26 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த சேனலை 17.3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

காணொளி தொடங்குவதற்கு முன் வரும் விளம்பரம் மூலம் ஒரு மில்லியன் டாலர்களும், மீதம் உள்ள தொகையை விளம்பரதாரர்களுக்காகவே தயாரிக்கப்படும் வீடியோக்கள் மூலமும் ஈட்டி உள்ளார்.

இந்த யு-டியூப் பக்கத்தில் ரயான் விமர்சனம் செய்யும் பொம்மைகள் உடனடியாக விற்றுவிடுகின்றன.

வால்மார்ட்

கடந்த ஆகஸ்ட் மாதம் வால்மார்ட் ரயான் வேர்ல்ட் என்ற பெயரில் பொம்மைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்ய தொடங்கியது.

ரயான் வேர்ல்ட் பொருட்களை ரயானும், அவரது பெற்றோரும் பார்வையிடும் காணொளி மட்டும் மூன்று மாதங்களில் 14 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது.

வால்மார்ட்டுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலமாக ரயானின் வருவாய் அடுத்தாண்டு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

ரயான் சிறுவன் என்பதால், அவருடைய வருவாயில் 15 சதவீதம் வங்கியில் போடப்படும். அவர் பெரியவரானான பின் தான் அந்தப் பணத்தை எடுக்க முடியும்

Related posts