கணேஷ் தினேஷின் பூதவுடல் நல்லடக்கம்

மட்டக்களப்பு, வவுணதீவு, வலையிறவு காவலரணில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் பூதவுடல், பொலிஸ் மரியாதையுடன் இன்று (02) முற்பகல் பெரியநீலாவணை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்விறுதி நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சந்திர ஜயசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று காலை அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்த அமரர் பொலிஸ் சார்ஜெண்ட் கணேஷ் தினேஷின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

கிழக்குமாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம, முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இங்கு வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்கள்

இதனை தொடர்ந்து பெரியநீலாவணை பிரதான வீதி வழியாக பூதவுடல் பொலிஸ் மரியாதையுடன் பெரியநீலாவணை பொது மாயனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இங்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசிங்க தலைமையில் அமரர் பெலிஸ் சார்ஜெண்ட் கணேஷ் தினேஷின் பூதவுடலுக்கு பொலிஸ் அணிவகுப்புடன் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுதாபச் செய்தி மற்றும் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரது அனுதாபச் செய்திகள் வாசிக்கப்பட்டன.

பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள் என பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலுடன் அன்னாரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் (30) அதிகாலை மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தில் பெரிய நீலாவணையைச் சேர்ந்த கணேஷ் தினேஷ் மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியானர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்னதினம் (30) ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, நேற்று (01) கிளிநொச்சி, வட்டக்கச்சியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேகநபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts