பாடகி சின்மயி வழக்கு தொடர்வது குறித்த தகவல்

டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம் காரணமாக, பாடகி சின்மயி வழக்கு தொடர்வது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய பாடகி சின்மயி, பாடுவது மட்டுமன்றி கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘96’ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்து இருந்தார். டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்த நிலையில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென்று நீக்கப்பட்டார். இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக எந்த விளக்கமும் சங்கத்தில் இருந்து வரவில்லை. சங்கத்துக்கு நான் 2 ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால்தான் என்னை நீக்கி இருப்பதாகவும் காரணம் சொல்லி உள்ளனர். சந்தா கட்டாதது குறித்தும் முன் அறிவிப்புகள் எனக்கு வரவில்லை” என்றார்.

நீக்கம் காரணமாக புதிய படங்களுக்கு டப்பிங் பேச சின்மயியை இயக்குனர்கள் அழைக்கவில்லை. இதனால் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து சின்மயி கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்து வக்கீல்களுடன்ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கோர்ட்டுக்கு சென்று சாதகமான தீர்ப்பை பெற்றதாகவும் அதன்படி சின்மயியும் கோர்ட்டுக்கு செல்ல தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Related posts