நிபந்தனையற்ற ஆதரவால் கூட்டமைப்பு எதையும் பெற முடியாது

தமிழ்தேசிய கூட்டமைப்பு பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு நிபந்தனை இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியை அல்லது ரணில் விக்கரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை எனவும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், சமகாலத்தில் உள்ள அரசியல் நிலமையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேரம் பேச கூடிய சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. எவரை ஆதரித்தால் தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது தீர்க்க முடியுமா? என்பதையே பார்க்கவேண்டும். வெறுமனே பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை அல்லது ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடியாது.

நிபந்தனையை ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டும் விதிக்கவேண்டும் என அவசியம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கூட விதிக்கலாம். அதை விடுத்து கண்ணை மூடி கொண்டு எவரையும் ஆதரிக்கவேண்டிய அவசியம் கிடையாது.

அதேபோல் எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வினை கேட்காவிட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், வடகிழக்கு மாகாணங்கள் இணைப்பு போன்ற விடயங்களையாவது முன்வைத்து உடனடி தீர்வினை கோரவேண்டும்.

இவ்வாறான நிபந்தனைகளை விதிக்காமல் ஆதரவளிப்பது என்பது அர்த்தமற்ற ஒன்றாகும் ஆக மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வும் கிடையாது, இவ்வாறான சில பிரச்சினைகளுக்கான தீர்வும் கிடையாது என்றால் என்ன பயன்? எனவே, இது தொடர்பாக மக்கள் முதலில் விழிப்பாக இருக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts