பொங்கல் பண்டிகையில் வெளியாகிறது ‘பேட்ட’

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது.

மொத்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை ரஜினியின் 2 கெட்டப்கள் கொண்ட போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது ‘பேட்ட’ படத்தின் 3-வது போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

அதில், ‘பொங்கலுக்கு பராக்’ என்று தெரிவித்து, பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது படக்குழு. இதனால் சமீபமாக எப்போது வெளியீடு என்று நிலவு வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு.

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, சசிகுமார், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். இதுவரை ரஜினியைத் தவிர வேறு யாருடைய லுக்கையுமே படக்குழு வெளியிடவில்லை.

தற்போது ரஜினி நடிக்கும் ‘பேட்ட’, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’, சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ‘வாட்ச்மேன்’ ஆகிய 4 படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts