சர்கார் படம் குறித்து அதிமுக புதிய விளக்கம்

மு.க.ஸ்டாலினை திருப்திப் படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படம்தான் சர்கார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்து வருகின்றனர். தற்போதைய அரசின் புதிய திட்டங்களும் அனைத்து குடும்பங்களையும் சென்றடைவதால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றிபெறும்.

கடந்த ஓராண்டாக தினகரன் அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் பெங்களூரு, குற்றாலம் விடுதிகளில் பொழுதைக் கழித்துவிட்டு தற்போது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். கட்சியில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த பணி முடிந்த பிறகு கட்சி தேர்தலை தலைமைக் கழகம் அறிவிக்கும்.

இலவச திட்டங்கள் மூலம் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பெரியார், அண்ணா ஆகியோரின் கனவு நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், ஜெயலலிதாவின் விலையில்லா சைக்கிள், சீருடை, மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய வளர்ச்சியை, சர்கார் படத்தில் விளையாட்டுத்தனமாக விமர்சித்துள்ளனர். அந்த படம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படம். இதில் இயக்குநர் முருகதாசும், நடிகர் விஜய்யும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related posts