ரணில் நல்ல தலைவர் ஆனால் வின்னர் அல்ல

மக்களிடையே வெற்றி பெறக்கூடிய ஒரு தலைவராக நாங்கள் சஜித் பிரேமதாஸவை காண்கிறோம்” என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உயர் நீதி மன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த வே. இராதாகிருஷ்ணன்,

“அதிகாரப்போக்கிற்கு அப்பால் இந்த நாட்டினுடைய ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லாது விடின் நீதித்துறையிலும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இல்லாது போய் விடும் சர்வதேசம் எம்மை மதிக்கின்ற செயலும் இல்லாது போய் விடும்” என்று தெரிவித்தார்.

இடைக்கால தடையுத்தரவு குறித்து ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு,

“இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படுமாயின் பாராளுமன்றம் கடந்த காலங்களில் காணப்பட்டதைப் போன்று இயங்கும்.

பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கின்ற பிரச்சினைகள் தனியே வேறாக சென்றுக் கொண்டிருக்கும்” என தெரிவித்தார்.

“மேலும் ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியாக நாங்கள் எதிர் வரும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.

ஆகவே ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கம் எல்லோரிடமும் உள்ளது. அதை அடிப்படையாக கொண்டு சில நடவடிக்கைகளை எடுக்கப்படும்” என தெரிவித்த அதே வேளை,

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு,

“நல்ல தலைவர் என்பது வேறு விடயம் வின்னர் என்பது அதாவது வெற்றி வாகை சூடுவது என்பது வேறு விடயம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க நல்ல தலைவர் சிறுபாண்மையினருக்கு அனுசரணையானவர் அதில் எந்த வித மாற்றமும் இல்லை.

ஆனால் மக்களிடையே வெற்றி பெறக்கூடிய ஒரு தலைவராக நாங்கள் சஜித் பிரேமதாஸவை காண்கிறோம்.

ஆகவே அவருடைய வருகை ஐக்கிய தேசிய கட்சியை மேலும் மெருகு ஊட்டி அதை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்லும் என்பதே எங்களுடைய நம்பிக்கை.

சஜித் பிரேமதாஸ தலைமைத்துவத்தை ஏற்று தேர்தல் களத்தில் இறங்கும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு குறிப்பாக மலையக மக்களுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? என்ற ஊடகவியலாளரின் வினாவிற்கு

“நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம். கடந்த காலத்தில் சஜித் பிரேமதாஸவின் தந்தை நாட்டின் ஜனாதிபதியாக இருந்த வேளையில் தான் மலையக மக்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டது.

அந்த உரிமையில் தான் நாங்கள் இன்று வாக்களித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே தகப்பனாரின் வழியில் மகனும் செய்வார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது” என பாராளுமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

Related posts