பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை: கமல்

பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை, உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்கள் வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந் கொண்டு பேசியதாவது:

ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஆங்காங்கே உள்ள ஏரிகள், குளங்களை பொதுமக்களே ஒருங்கிணைந்து தூர்வார முன் வர வேண்டும். அவற்றில் குப்பைகளை கொட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

உழைக்கும் மக்களின் பணம் தான் அரசின் கஜானாவை நிரப்புகிறது. அதை அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் எடுத்து காலி செய்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன.

மக்களின் பணத்தை ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியை தேர்தலின்போது வாக்குகளை பெறுவதற்காக மக்களுக்கே திருப்பி கொடுக்கின்றனர். பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை. உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்கள் வேண்டாம்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related posts