வெளி நாட்டு தூதுவர்களை ஜனாதிபதி சந்தித்து ஆதரவு கோரினார்

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

புதிய பிரதமர் ஒருவரை தெரிவுசெய்யும் தீர்மானத்திற்கு காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை இதன்போது ஜனாதிபதி தூதுவர்களுக்கு விளக்கி கூறினார்.

குறித்த சந்திப்பு நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த வெளிநாட்டு தூதுவர்கள், நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப நாட்டினுள் அமைதியை பேணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

நாட்டின் அரசியல் அமைப்பிற்கேற்ப தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமையவே, தான் பிரதமரை நியமித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் என்றவகையில் அணிசேரா கொள்கைக்கேற்ப அனைத்து நாடுகளுடனும் இருந்துவரும் உறவுகளை மேலும் பலப்படுத்தி முன்கொண்டு செல்வதற்கும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமாதானம் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையிலான மத்தியிலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, பலமாக முன்கொண்டு செல்வதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்ஹ பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts