பாதுகாப்பு படையினர் இல்லாவிட்டால் கொன்றிருப்பார்கள்

பாதுகாப்பு ஆள்கள் இருக்கவில்லையென்றால் தன்னைக் கொன்றிருப்பர் என்றும் உண்மையில், முதன்முறையாக மரண பயத்தைக் காட்டிவிட்டனர் என்றும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போட்டியில் மகிந்த – ரணில் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது அலுவலகத்தில் உள்ள பொருள்களை எடுப்பதற்கும் அந்த அலுவலகத்தை ஒப்படைப்பதற்கும் பெட்ரோலிய அமைச்சராக பதவி வகித்தவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான, அர்ஜுன ரணதுங்க பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றார். அப்போது மகிந்த ஆதரவாளர்கள் தன் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அர்ஜுன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இதில் ஏற்பட்ட பதற்றத்தால் அர்ஜுன ரணதுங்க பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்த சம்பவம் குறித்து அர்ஜுன ரணதுங்கவிடம் கேட்டபோது, சண்டித்தனமாக, அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது எனக்கூறினார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கும் தற்போதுள்ள அரசியல் குழப்பத்திற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து பிபிசியிடம் பேசிய அர்ஜுன ரணதுங்க, ”மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவு வழங்குமாறு எனக்கு அழைப்புக்கள் வந்தன. ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதனால் இவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். ஆட்சியையும், அதிகாரத்தையும் பலவந்தமாக பிடிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.” என தெரிவித்தார்.

”என்னை விலை கொடுத்து வாங்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் சலுகைகளையும், பதவிகளையும் தருவதாகக் கூறினார்கள். ஆனால் நான் நேர்மையாக செயற்படுபவன். அதனால் நான் ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பதற்குத் தீர்மானித்தேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.

உங்களை இலக்குவைத்து தாக்க என்ன காரணம்? உண்மையில் என்ன நடந்தது? என்று கேட்டதற்கு, ”புதிதாக மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தில் குழப்பம் உள்ளது. ஆனாலும், நான் எனது அமைச்சுப் பொறுப்புக்களை ஒப்படைப்பதற்கும், அலுவலகத்தில் உள்ள பொருட்களை எடுப்பதற்கும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்றேன். அதன்போது மகிந்த ராஜபக்ஷ தரப்பினரின் ஆதரவாளர்களை என் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.”

மேலும், “விசேட அதிடிப்படையினர் என்னைக் காப்பாற்றினர். குடிபோதையில் வந்தவர்களே என்னைத் தாக்க முயற்சித்தனர். பாதுகாப்பு படையினர் இல்லாமல் போயிருந்தால் என்னைக் கொன்றிருப்பர்.” என்று தெரிவித்தார்.

“உண்மையாகக் கூறுகிறறேன், முதன் முறையாக மரண பயத்தைக் காட்டிவிட்டனர். அந்தத் தருணத்தில் எனது பிள்ளைகள் எனக்கு ஞாபகம் வந்தனர். நான் நாட்டிற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவன். கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றெடுப்பதற்கு பாரிய பங்களிப்புச் செய்தேன். என்னையே இவ்வாறு அச்சுறுத்துகின்றனர் என்றால் ஏனையவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இது ஆரம்பம் மட்டுமே. மேலும் என்னென்ன நடக்கும் என்று தெரியாது.” என்றார்.

அர்ஜுன ரணதுங்கவை தாக்க முயற்சித்த சம்பவத்தின் போது பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கு அர்ஜுன ரணதுங்கவே பொறுப்பேற்க வேண்டுமெனவும், அர்ஜுன ரணதுங்க கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஷ தரப்பு தொழிற்சங்க ஊழியர்கள் கூறிவருகின்றனர்.

அர்ஜுன ரணதுங்கவிற்கு விசேட அதிரடிப்படையினரின் ஆடைகள் வழங்கி வெளியே அழைந்துவந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவைக் கைதுசெய்ய கோரி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.

அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்படும் வரையில் பெட்ரோல் விநியோகத்தைத் தடைசெய்வதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து அங்கு பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதனால் கொழும்பு நகரில் பெட்ரோல் நிரப்புவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணக்கூடியதாக இருக்கிறது.

அரச நிறுவனங்களில் இருந்து ரணில் தரப்பினரை விரட்டியடித்து மகிந்த தரப்பினர் கைப்பற்றி வரும் வரிசையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு அர்ஜுன ரணதுங்க செல்ல சம்மதிக்கும் பட்சத்தில், அர்ஜுனவைக் கைதுசெய்ய வேண்டும் என்ற கோசம் கைவிடப்படலாம் என்றும், அரசியல் லாபத்திற்காகவே இவ்வாறு பெட்ரோலை நிறுத்தி, மக்களை அசௌகரியத்திற்குள் தள்ளியுள்ளதாகவும், அர்ஜுன ரணதுங்கவுடன் நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசியல் நெருக்கடியினால் பொதுமக்களை அசௌகரியத்திற்குள் தள்ளக் கூடாது என்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி இதில் தலையிட்டு, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts