ஒரே சீட்டுக்கு ரூ. 12,000 கோடி ஜாக்பாட் லாட்டரி பரிசு

அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் லாட்டரியில் ஒரு சீட்டுக்கு 12,000 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

அமெரிக்காவிலும் பல்வேறு லாட்டரிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் மெகா மில்லியன்ஸ் நிறுவனம் அவ்வப்போது அதிக பரிசுத்தொகையுடன் லாட்டரியை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு முதல் பரிசாக இந்திய ரூபாய் மதிப்பில் 12 ஆயிரம் கோடி அறிவித்தது.

இந்த லாட்டரி குலுக்கல் தற்போது முடிந்துள்ள நிலையில் தெற்கு கரோலினாவில் இந்த லாட்டரி விற்பனையாகியுள்ளது. இதற்கான எண்களாக 5, 28, 62, 65, 70 அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் இதுவரை இல்லாத பரிசாக கருதப்படுகிறது. இந்த பரிசு பெறும் நபர் யார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

அதேசமயம் அவருக்கு வரிகள் மற்றும் செலவுகள் போக 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பரித்தொகை வழங்கப்படும் என தெரிகிறது. இந்த லாட்டரி அறிமுகம் செய்யப்பட்டபோது மால்கள், வணிக வளாகங்கள், பார்கள் என அனைத்து இடங்களிலும் இந்த லாட்டரி விற்று தீர்ந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்தபட்சம் 150 ரூபாய் மதிப்பு கொண்ட இவை மொத்தம் 30 கோடி என்ற எண்ணிக்கையில் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பாக 2016-ம் ஆண்டு நடந்த லாட்டரியில் இந்திய ரூபாய் மதிப்பில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. இதுவே அமெரிக்காவில் இதுவரை அதிக பரிசுத்தொகையாக கருதப்பட்டது. இதனை மூன்று பேர் பிரித்துக் கொண்டனர். தற்போது அதைவிட அதிகமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts