ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த லாரன்சுக்கு பெரிய மனது

மீ டூ’ பரபரப்புக்கு முன்பே பாலியல் புகார்களால் திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் கூறினார்.

தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார்.

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் லாரன்ஸ் மறுத்தார். நடிப்பு திறமையை வெளிப்படுத்தினால் அடுத்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு அளிப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் லாரன்சின் அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஸ்ரீரெட்டியே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘‘லாரன்சை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இனிமையாக என்னை வரவேற்றார் நிறைய குழந்தைகள் அங்கு மகிழ்ச்சியோடு இருந்ததை பார்த்தேன். எனக்காக அவர்கள் பிரார்த்தனை செய்தனர். அங்கு நடித்து காண்பித்தேன். அதை பார்த்த லாரன்ஸ் அவரது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்து அட்வான்சும் கொடுத்தார்’’ என்றார்.

இதுகுறித்து லாரன்ஸ் கூறும்போது, ‘‘ஸ்ரீரெட்டி நடிக்க வாய்ப்பு தேடி மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். என்னை பற்றி அவர் சொன்னதற்கு ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன். ஸ்ரீரெட்டிக்கு யாரும் இதுவரை வாய்ப்பு அளிக்கவில்லை. அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவரது நடிப்பு திறமையை நேரில் பார்த்து எனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்து இருக்கிறேன்’’ என்றார்.

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த லாரன்சுக்கு பெரிய மனது என்று சமூக வலைத்தளங்களில் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Related posts