நடிகைகளின் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு

தமிழ் திரையுலகில், நடிகைகளின் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள ‘சண்டக்கோழி-2’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது விஷாலிடம் ‘மீ டூ’வில் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பெண்கள் பாலியல் புகார்கள் குறித்து பதிவிடுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

“சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறோம். சண்டக்கோழி-2 படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் மீது படக்குழுவில் உள்ள ஆண்கள் கண்ணியத்தோடு நடந்து கொண்டனர். பாலியல் தொல்லைகளை நடிகைகள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பெண்கள் தாமதிக்காமல் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் விரைந்து நடவடிக்கை எடுப்போம்.

நடிகை அமலாபால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எங்களிடம் சொன்னதும், நானும் கார்த்தியும் மலேசியாவுக்கு தொடர்பு கொண்டு பேசினோம். பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போலீசார் நடவடிக்கையும் எடுக்கவும் ஏற்பாடு செய்தோம். இதுபோல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் உடனே எங்களிடம் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் போலீஸ் நிலையம் அல்ல.

படப்பிடிப்புகளில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நான் ‘மீ டூ’ வுக்கு ஆதரவாக இருப்பேன். பெண்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன். அவர்களின் முன்னேற்றத்தை பார்த்தும் சந்தோஷப்படுவேன். தமிழ் திரையுலகில் பாலியல் கொடுமை பற்றிய ‘மீ டு’ விவகாரம் குறித்து விசாரிக்கவும் நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் 3 பேர் குழு அமைக்கப்படும். சண்டக்கோழி-2 படம் சிறப்பாக வந்துள்ளது.”

இவ்வாறு விஷால் பேசினார்.

Related posts