சஜித் எதிர்கால ஜனாதிபதியாக வர கூடியவர் ; யாழில் மனோ

வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுபட வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

பகையாளியாக என்னை பார்க்காதீர்கள் வடக்கு கிழக்கில் பல தமிழ் கட்சிகள் உண்டு. எம்மை பகைமை உணர்வோடு பார்க்காதீர்கள் நட்புடன் பாருங்கள். பகைமை முரண்பாட்டு இருக்க கூடாது நட்பு முரண்பாடு இருக்கலாம். பகைமை முரண்பாடு இருந்தால் அது எதிரிக்கு தான் வாய்ப்பு.

பகைமை முரண்பாட்டுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனை பார்க்காதீர்கள். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் எனது இரத்தத்தின் இரத்தங்கள். அவர்களுக்கு துன்பம் துயரம் வந்தால் எனக்கு வலிக்கின்றது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே உணர்வால் , ஒரே இரத்தம் உடையவர்கள்.

அதனை என்னுடன் முரண்பாட்டை தோற்றுவிக்க விரும்புவோர்அறிய வேண்டும். கடந்த கால போர் வரலாறு , மனித உரிமை போராட்டம் தெரியாத சில புது முகங்களுக்கு புரியவில்லை. அவ்வாறு புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து தமக்கு தான் எல்லாம் தெரியும் தாமே எல்லாம் அறிந்தவர்கள் எனும் பாணியில் செயற்பட வேண்டாம்.

நான் எல்லோருக்கும் தோழன்.

கடந்த வாரத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச விடம் வீட்டு திட்டம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். சஜித் எதிர்கால ஜனாதிபதியாக வர கூடியவர். அவருடன் நெருங்கிய தொடர்பு எனக்கு இருக்கின்றது. அவரிடம் உள்ள வீட்டு திட்டம் மாதிரி கிராம வீட்டு திட்டம். ஆனால் எனது அமைச்சிடம் உள்ள நல்லிணக்க வீட்டு திட்டம் இது மாதிரி கிராம வீட்டு திட்டம் போல் அல்ல யுத்தத்தால் பாதிப்படைந்த மக்கள் வாழும் இடங்களுக்கு சென்று அவர்களுக்கு வீட்டு திட்டம் வழங்குவது.

கடந்த காலத்தில் வீட்டு திட்டம் தாமதம் ஆக நான் காரணமில்லை எனக்கு வீட்டு திட்டம் வழங்க அனுமதி கிடைத்தது எட்டாவது மாதத்தில் தான் இப்போது இரண்டு மாதம் தான் ஆகியுள்ளது. அந்நிலையில் என்னை திட்டுவது ஏற்புடையது அல்ல. என்னை திட்ட வேண்டும் என்றால் வேறு காரணங்கள் கூறி திட்டுங்கள். வீட்டு திட்டம் தாமதம் என கூறி திட்டாதீர்கள்.

எங்கள் அரசாங்கம் எனக்கு வீட்டு திட்டம் வழங்க அனுமதித்து உள்ளது. அதனை நல்லிணக்க அமைச்சுக்கு கொடுக்க வேண்டாம் என யாரும் தடுக்க முடியாது. யாருக்கு எதனை கொடுப்பது என்பதனை ஜனாதிபதி பிரதமர் தீர்மானிப்பார்கள். மற்றவர்கள் அது பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

கடந்த மூன்று வருடங்களாக வீட்டு திட்டம் தாமதம் ஆகும் போது அரசாங்கத்தில் இருந்தவர்களும் எதிர்க்கட்சியில் இருந்தவர்களும் அப்போது தூங்கி கொண்டு இருந்தார்கள். தற்போது எனக்கு வீட்டு திட்டம் வழங்க அரசாங்கம் அனுமதித்த வுடன் தான் பலர் கண் விழித்து உள்ளனர்.

வடமாகாண முதாலமைச்சர் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருடன் மோதுவது போல என்னுடன் மோதவேண்டாம். மரங்கொத்தி பல மரங்களை கொத்திய பிறகு வாழை மரத்தை கொத்தி மாட்டுப்பட்டது போல என்னுடன் மோதி மாட்டுபட வேண்டாம் என தெரிவித்தார்.

Related posts