ரஜினி கட்சியில் சேர முடிவா? நடிகை குஷ்பு விளக்கம்

ரஜினி கட்சியில் சேர முடிவா? என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

குஷ்பு தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000–களில் முன்னணி கதாநாயகியாக இருந்து பிறகு 2010–ல் கருணாநிதியை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். அந்த கட்சியில் முன்னணி பேச்சாளராக செயல்பட்ட அவர் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தார்.

அதன்பிறகு தி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் யார் என்பதில் சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளாகி அவரது வீட்டில் கல்வீச்சும் நடந்தது. இதனால் தி.மு.க.வை விட்டு விலகி காங்கிரசில் இணைந்தார். இப்போது அந்த கட்சியில் செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.

சமீபத்தில் காங்கிரசில் இருக்கும் நக்மாவுக்கும், குஷ்புவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் பரவின. இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததும் குஷ்பு அவரது கட்சியில் இணைந்து விடுவார் என்றும் கொள்கை பரப்பு செயலாளர் பதவி குஷ்புக்கு வழங்கப்படும் என்றும் பேச்சு அடிபட்டது.

ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில்தான் குஷ்பு அறிமுகமானார். மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.

ரஜினிகாந்தை அடிக்கடி பாராட்டியும் பேசி வருகிறார். இப்போது ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அரசியல் களத்தில் ரஜினிகாந்தோடு நீங்கள் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த குஷ்பு, ‘‘நான் காங்கிரஸ் கட்சியில் மனநிறைவோடு இருக்கிறேன்’’ என்று பதில் அளித்து இருக்கிறார்.

Related posts