மட்டக்களப்பு : கடன் 37 பெண்கள் தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு நுண்கடன் காரணமாக 37 பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான செல்வி மனோகர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நேற்று (01) மாலை முறக்கொட்டாஞ்சேனையில் நடைபெற்றது.

சிறுவர்களின் உரிமையினையும் அவர்களின் பாதுகாப்பினையும் சிறுவர்களின் கல்வி உரிமை மற்றும் ஏனைய உரிமைகளை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் நடாத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறுவர் தின நிகழ்வுகளும் சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த சிறுவர் தின நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான செல்வி மனோகர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி எஸ்.சகுந்தலா, ஏறாவூப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சிறிக்காந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறுவர் தின உரைகளும் நடைபெற்று பரிசுகளும் சிறுவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய செல்வி மனோகர், மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடனின் தாக்கம் என்பது அதிகமான நிலையிலேயே இருந்து வருகின்றது. தமிழ் பெண்களை இலக்கு வைத்தே நுண்கடன் நிறுவனங்கள் இயங்குகின்றன. தமிழ் பெண்கள் ஏமாற்றாமல் எவ்வாறாவது பெரும் கடனை செலுத்துவார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

இதற்கு நாங்கள் நுண்கடன் நிறுவனங்களை மட்டும் குறைகூறிக்கொண்டிருப்பதனால் எந்த பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாங்கள் உணர்ந்து அதில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

நுண்கடன் காரணமாக இந்த ஆண்டு 37 பெண்கள் இந்த மாவட்டத்தில் தற்கொலை செய்துள்ளனர். 163 இளம் குடும்பங்கள் நீதிமன்றம் சென்று பிரிந்துள்ளது. 300க்கும் அதிகமான தாய்மார் இந்த நுண்கடன் பிரச்சினைகள் காரணமாக தமது பிள்ளைகளை பிரிந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர். இதற்கு எல்லாம் இந்த நுண்கடன் பிரச்சினையே காரணம்.

கணவன்மார் கடுமையான முயற்சியினால் உழைத்துவரும் பணங்களை பெண்கள் நுண்கடன் நிறுவனங்களுக்கு வழங்கும் நிலையே இருந்து வருகின்றது. கடுமையான உழைப்புகளை மேற்கொள்ளும் கணவருக்கு நல்ல உணவு வழங்குவதுமில்லை, பிள்ளைகளுக்கு நல்ல போசாக்கான உணவும் வழங்கவதில்லை. இதன் காரணமாக எதிர்கால சந்ததியையும் நாங்கள் நொண்டிகளாக்கும் நிலையினையே ஏற்படுத்துகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் பெண்களின் நிலமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவான நிலையிலேயே இருந்துவருகின்றது. இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து பெண்களை மீட்பதற்கான எந்த திட்டமும் அவர்களிடம் இல்லை.

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனால் மகளிர் அமைப்புகளுக்கு 170 மில்லியனுக்கு மேல் நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. நுண்கடனின் தாக்கத்தினை குறைப்பதற்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஒரு மகளிர் அமைப்புக்கு கூட எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மீண்டும் கைப்பற்றும். அப்போது அபிவிருத்தி என்றால் என்ன என்பதை நாங்கள் செய்துகாட்டுவோம் எனவும் இங்கு தெரிவித்தார்.

Related posts