மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர்.

நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

லக்னோவில் உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டில் கவர்னர் பன்வாரில்லால் புரோகித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் காந்தி சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related posts