வடக்கில் சுற்றுலாத்துறை கூட மந்தகதியில்… தேவையா..?

இலங்கைக்கு மிகக்கூடிய வருவாயைத் தேடித் தருகின்ற சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி பணிகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி அடைந்துள்ளபோதும் வட பகுதிக்கான சுற்றுலா அபிவிருத்தி செயற்பாடுகள் மந்த கதியிலே உள்ளன என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையும், வடக்கு மாகாண சுற்றுலா பணியகமும் மற்றும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் உலக சுற்றுலாத் தினம் – 2018 இன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,வட பகுதியின் சுற்றுலா அபிவிருத்தி வளர்ச்சியடையாமைக்கு இப் பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தம் ஒரு காரணமாக காட்டப்பட்டுள்ளபோதும் யுத்தம் நிறைவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் சுற்றுலாத்துறையின் வளரச்சியானது மிகவும் மந்தமான கதியில் நகர்வது வருத்தத்திற்குரியது.

நீண்டகால யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மேம்பாடு, போக்குவரத்துக்கான தெருப் பாதைகளின் புனரமைப்பு, புகையிரத சேவையின் மீள் அறிமுகம் ஆகிய செயற்பாடுகளின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் அனுபவங்களைப் பெற்றுள்ள முதலீட்டாளர்களை இப் பகுதிக்கு வரவழைத்து சுற்றுலாத் துறையில் முதலீடுகளை மேற்கொண்டு இத் துறையை வளர்ச்சியடையச் செய்வதற்காக வடமாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் சுற்றுலாத் துறைக்கென தனியான ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு பேராசிரியர் தேவராஜாவின் வழிகாட்டலின் கீழ் வடமாகாணத்திற்கான சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப்பணியகம் என்ற ஒரு அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு சுற்றுலாத்துறையின் அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதற்கான பொறுப்புகளையும், நடவடிக்கைகளையும் அதனிடம் கையளித்துள்ளோம்.

வடபகுதிக்கான இந்த சுற்றுலாப் பணியகத்தின் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு துரிதமான அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை நான் அவதானித்துள்ளேன். இன்று நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சி நிகழ்வுகள் மற்றும் உலக சுற்றுலா தின கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் எமது அமைச்சின் செயலாளருடன் சேர்ந்து இந்த சுற்றுலா பணியகமும் அதன் இதர உத்தியோகத்தர்களும் அக்கறையும் ஊக்கமும் காட்டி வருகின்றனர்.

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு மிகக் கூடிய அளவிலான சுற்றுலா மையங்களும் புராதன சின்னங்களும் வரலாற்றுப் பதிவுகளும் மற்றும் இன்னோரன்ன பாரம்பரிய கலை கலாச்சார விழுமியங்களும் காணப்படுகின்றன. அவற்றை முறையாக வரிசைப்படுத்தி எமது புராதன சின்னங்களின் வரலாற்றுப் பதிவுகளை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

சரித்திரம் சில இடங்களில் பிறழ்வாக எடுத்துரைத்து வரப்படும் இக்கால கட்டத்தில் எமது பாரம்பரியத்தின் உண்மை நிலை உலகிற்கு எடுத்துக் காட்டப்படுவது அத்தியாவசியமாகின்றது என்றார்.

Related posts