ஷில்பா ஷெட்டி மீது நிறவெறி தாக்குதல்

ஷில்பா ஷெட்டி மீது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விமான நிலையத்தில் நிறவெறி தாக்குதல் நடந்துள்ளது.

மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷில்பா ஷெட்டி. குஷி படத்தில் கவுரவ தோற்றத்தில் வந்தார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை மணந்துள்ள அவர் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

ஷில்பா ஷெட்டி மீது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விமான நிலையத்தில் நிறவெறி தாக்குதல் நடந்துள்ளது. அவர் மெல்போர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்துக்கு வந்துள்ளார். விமான நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஷில்பா ஷெட்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர் ஷில்பா ஷெட்டியின் நிறத்தை கூறி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

அதோடு ஷில்பா ஷெட்டி எடுத்துவந்த உடைமைகள் அதிகமாக இருப்பதாக கூறி அவற்றையும் அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் ஷில்பா ஷெட்டி மெல்போர்ன் செல்ல வேண்டிய விமானத்தை தவற விட்டுள்ளார். இந்த சம்பவத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையோடு பதிவிட்டுள்ளார்.

‘‘என்னிடம் நிறவெறி துவே‌ஷம் காட்டிய பெண் ஊழியர் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தம் அளிக்கிறது’’ என்று அதில் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2007–ம் ஆண்டு லண்டனில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பிரதர்ஸ் 5 சீசனில் ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டபோது அவருடன் சக போட்டியாளராக பங்கேற்றவர் நிறத்தை குறிப்பிட்டு மோசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Related posts