கீர்த்தி சுரேஷை ரிலாக்ஸ் ஆக்கிய ‘சண்டக்கோழி 2’

‘சண்டக்கோழி 2’ படம்தான் தனக்கு ரிலாக்ஸாக இருந்தது என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க, கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கீர்த்தி சுரேஷ், “லிங்குசாமி சாருக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையைக் கேட்கும்போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன். மீரா ஜாஸ்மின் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும், ‘சண்டக்கோழி’ முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று.

அதை எப்படி நான் பண்ணப் போகிறேன் என்ற பயம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தைக் கேட்டபின், அதற்கு நிகராகவாவது நடிக்க வேண்டும் என தோன்றியது. ‘மகாநடி’ படப்பிடிப்பின்போதும் இந்தப் படம்தான் எனக்குப் பெரிய ரிலாக்ஸாக இருந்தது. ‘மகாநடி’க்குப் பின் நான் விரும்பி நடித்த படம் ‘சண்டக்கோழி 2’.

பிருந்தா சாரதி, ஒவ்வொரு வசனத்தையும் எனக்கு ஏற்றவாறு சொல்லிக் கொடுத்தார். பாடல் எழுதிய அனைத்துப் பாடலாசிரியர்களுக்கும் நன்றி. யுவன் இசையில் அனைத்துப் பாடல்களும் அருமையாக வந்திருக்கின்றன, அவருக்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் நண்பராக விஷால் கிடைத்துள்ளார்” என்றார்.

Related posts