‘சர்கார்’ படத்துக்காக 7 நாளில் ‘டப்பிங்’ பேசி முடித்த விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், கிராபிக்ஸ், இசை கோர்ப்பு பணிகள் நடக்கின்றன.

விஜய் 7 நாட்களில் இந்த படத்துக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். அடுத்த மாதம் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வந்த துப்பாக்கி, கத்தி படங்கள் நல்ல வசூல் பார்த்தன என்பதால் சர்கார் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் முதல் பாதியில் அமெரிக்காவில் வசிக்கும் தொழில் அதிபராகவும் அதன்பிறகு அரசியல்வாதியாகவும் விஜய் நடிப்பதாக தகவல். ஆனாலும் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே சர்கார் படத்தின் முதல் தோற்றம் வெளியானபோது சர்ச்சையில் சிக்கியது.

அதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியை எதிர்த்தனர். இதனால் அந்த காட்சியை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. இந்த காட்சி படத்தில் இடம்பெற்று உள்ளதா? அல்லது விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.

Related posts

Leave a Comment