அலைகள் வாராந்தப் பழமொழிகள் 21.04.2018 சனிக்கிழமை

உலகப் புகழ் பெற்ற நூல்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்கள்..

01. புறச்சூழல்தான் உங்களை உருவாக்குகின்றன. ஆகவே உங்களை நல்ல முறையில் உருவாக்குவதற்குரிய புறச்சூழலை தேர்வு செய்யுங்கள். உங்களை சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் உங்களை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறதா இல்லை உங்கள் உயர்வுக்கு வழி கோலுகிறதா என்று பார்த்து அதில் ஈடுபடுங்கள்.

02. நீங்கள் தேர்வு செய்யும் சுற்றுவட்டார மனிதர்கள் உங்கள் கோட்பாடுகள் மீது அனுதாபம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் திட்டமிட்ட குறிக்கோளுடன் தொடர்பு கொண்ட மனிதர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் அவர்களுடன் காலம் கழிப்பதில் பயன் எதுவும் இல்லை.

03. உங்கள் சகாக்களிடம் இருந்து வெளிப்படும் ஆர்வம், தன்னம்பிக்கை போன்ற விடயங்கள் உங்களை வசீகரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களையே உங்கள் சகாக்களாக தேர்வு செய்வதை ஒரு கொள்கையாக வைத்திருங்கள்.

04. நீங்கள் காதால் கேட்கும் ஒவ்வொரு சொல்லும், உங்கள் பார்வையில் படும் ஒவ்வொரு காட்சிகளும், ஐம்புலன்கள் மூலம் கிடைக்கும் உணர்வுகளும் உங்கள் எண்ணத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

05. உங்கள் திட்டமிட்ட குறிக்கோளுடன் சம்மந்தப்பட்ட புத்தகங்களை படிப்பது அவசியம். உங்கள் முயற்சிக்கு அனுசரணை செய்யும் மனிதர்களுடன் பழகுவதும் அவசியமாகும்.

06. ஒருவரின் நேர்த்தியான மேசையும், அலமாரியும் அவருடைய ஒருங்கிணைந்த மனதை அடையாளம் காட்டிவிடுவது போலவே புறச்சூழலும் நீங்கள் பழகும் சமுதாய நகர்வும் உங்களை அடையாளம் காட்டும்.

07. நீங்கள் சாதிக்க விரும்பும் ஆசை மனதில் கனலாக தகிக்க வேண்டும். அதன் மீது உங்களிடமுள்ள ஆற்றல்கள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி உழைத்தால் அது வெற்றியாக மாறுகிறது.

08. மனதை ஒருமுகப்படுத்துதல் என்றால் என்ன ஒரு காரியத்தை நன்கு திட்டமிட வேண்டும். அக்காரியம் நிறைவேறும்வரை அதை அறிமுகமான ஒன்றாக மாற்றிக் கொண்டு அதில் தேர்ச்சி பெற வேண்டும். இக்காரியம் நிறைவேறும்வரை தொடர்ந்து இச்செயலை ஒரு பழக்கமாகவே செய்து வருவதையே மனதை ஒருமுகப்படுத்தல் என்கிறார்கள்.

09. வாரத்தில் நான்கு பிறந்தநாள், திருவிழா, கலைவிழா என்று இழுபட்டு சென்றால் ஒரு கட்டத்தில் நீங்கள் அதற்காகவே வாழும் மனிதராக மாறுவீர்கள். சிறிது காலம் போன பின்னர் அத்தகைய பழக்கங்கள் என்ற சுழி உங்களை திரும்ப முடியாத தொலைக்கு இழுத்துப் போய்விட்டதை கண்முன்னாகவே காண்பீர்கள்.

10. நீங்கள் தொடர்பை துண்டித்துக் கொள்ள விரும்பும் சில தேவையற்ற பழக்கங்களை உதறி எறிந்துவிட்டு, புதிய பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளும் சக்தியை பெற வேண்டும். அப்படி மாறினால் சுய நிபுணத்துவம் பெற்றுவிட்டீர்கள் என்பது அர்த்தமாகும்.

11. நீங்கள் சிந்திக்க விரும்பும் வண்ணமாக சிந்திக்கும் திறனைப் பெறுவதே மனதை ஒருமுகப்படுத்துவதன் அர்த்தமாகும்.

12. உங்கள் திட்டமிட்ட குறிக்கோளின் மீது மனதை ஒரு முகப்படுத்தும் போது அதனுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு விஷயங்களும் ஒன்றிணைந்து அதை முழுமையானதாக மாற்றுவதைக் காண நேரிடும்.

13. சென்ற நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை டைம் சஞ்சிகை ஐன்ஸ்டைனுக்கு வழங்கியது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் வால்டர் ஈசாக்சன் அதற்குக் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா..?

பேராற்றல் நிறைந்த மனமும், நமது யுகத்தின் நிலையான அடையாளச் சின்னமாகவும் விளங்கிய மனிதர் என்கிறார். அவருடைய தேடலும் அசாதாரணமான புத்திசாலித்தனமும் அவருடைய முகத்தை ஓர் அடையாள சின்னமாகவும், அவர் பெயரை அறிவாளிகளைக் காட்டும் குறியீடாகவும் மாற்றியிருக்கிறது என்றார்.

14. எதை நினைக்கும்போது சமுதாயத்தில் உனது முகம் வருகிறது என்பதை எண்ணிப்பார்… நீ வாழ்வில் தோல்விப்படியில் இருக்கிறாயா இல்லை வெற்றிப்படியில் இருக்கிறாயா என்பதை எளிதில் கண்டறிவாய்.

15. ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் எல்லாம் மனதால் ஆராய்ச்சி செய்யப்பட்டவை. அறிவுச் செய்திகள் அனைத்தும் மனதால் ஒருங்கிணைக்கப்பட்டு, மனதை அதில் செலுத்திய போது அவை ஒன்றுகூடி இலக்கை எட்ட வைத்துவிட்டன.

16. வெற்றிகரமான மன ஒருமைப்பாட்டிற்கு விருப்பம் மற்றயது ஆசை இரண்டுமே பெரிதும் துணை நிற்கின்றன. பலர் தோல்வியடையக் காரணம் அவர்களிடம் ஆர்வமும் ஆசையும் குறைவாக இருப்பதேயாகும்.

17. உங்கள் ஆசை எதுவாக இருந்தாலும், அது காரண காரியங்களுக்கு உட்பட்டதாகவும் உறுதியானதாகவும் இருந்தால் மன ஒருமைப்பாடு மந்திரச் சாவி போல உங்களுக்கு உதவி செய்யும். உங்கள் குறிக்கோள் நிறைவேறிவிடும்.

18. விஞ்ஞானிகளும், மனோதத்துவ ஆராய்ச்சியாளரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா.. மனதை ஒருமுகப்படுத்தும் கோட்பாடு மூலம் பிரார்த்தனைகள் ஆசைகளாக மாறி அடி மனதில் சென்று தங்குவதால் அவை பலிதமாகின்றன என்கிறார்கள்.

19. முதலில் கற்பனை செய்து, பிறகு ஆசைப்பட்டு, அதில் மனதை ஒருமுகப்படுத்தாமல் எந்தவொரு விஷயத்தையும் மனிதனால் கண்டுபிடிக்க முடியாது. காலம் காலமாக அப்படித்தான் கண்டு பிடிப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

20. முதலில் நீங்கள் மனதில் இருந்து அவ நம்பிக்கை சந்தேகம் போன்ற விடயங்களை விரட்டிவிட வேண்டும்.

21. மனதில் உருவாகும் கற்பனைச் சாம்ராஜ்யங்கள்தான் எதிர்காலத்தில் நிஜமான சாம்ராஜ்யங்களாக மாறுகின்றன.

22. முதலில் உங்கள் ஆசையை எழுதுங்கள் பின் தினமும் அதன் மீது பத்து நிமிடங்கள் மனதை ஒருமைப்படுத்துங்கள். படுக்கப் போகும்போதும் எழும்பும் போதும் இதை தொடர்ந்து செய்யுங்கள்.

23. திட்டங்களுக்கு ஒரு கால வரையறை கொடுங்கள். அதன் பின்னர் கற்பனை என்னும் வர்ணம் கொடுத்து அந்த மாளிகையை வரையுங்கள்.

24. அனைத்துவிதமான மாபெரும் உண்மைகளும் எளிமையானவைதான் என்பது இறுதி ஆய்வின் போது தெரியவரும். ஆகவே அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் அவை மாபெரும் உண்மைகளாக இருக்க தகுதியற்றவை.

25. நேற்றைய நாட்கள் திரும்பி வரப்போவதில்லை. உங்களுடைய முந்தைய முயற்சிகள் சரியாக அமையவில்லை என்றால் மறுபடியும் புதிதாக முதலில் இருந்து தொடங்குங்கள். வெற்றிக்கதை சொல்லும் ஓர் எதிர்காலத்தை உருவாக்குங்கள்.

உங்கள் பெயர் நிலைத்திருக்கும்படி செய்யுங்கள். பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்யுங்கள். மனதை ஒரு நிலைப்படுத்துவதன் மூலம் இதை செய்யுங்கள். என்னால் முடியும் என்று நீங்கள் நம்பினால் இதை சாதித்துக் காட்ட முடியும்.

அலைகள் பழமொழிகள் தொடரும்.
நம்பிக்கைகளை அளவின்றி அள்ளித்தரும்.
21.04.2018 சனிக்கிழமை

Related posts

Leave a Comment